

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation - EPFO) அதன் உறுப்பினர்களுக்காக ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை (EPS-Employees' Pension Scheme) நடத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் சேவை காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். ஈபிஎஸ் ஓய்வூதியத்தைப் பெற, ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) (EPFO விதிகள்) விதிகளின்படி, மாத ஓய்வூதியம் பெறுவதற்கு உங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் தேவை. அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே உங்கள் மொத்த சேமிப்பு மற்றும் ஓய்வூதிய நிதியை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டால், வழக்கமான மாத ஓய்வூதியத்தைப் பெறும் உரிமையை இழந்துவிடுவீர்கள்.
அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் (monthly pension) பெற தகுதி பெற வேண்டும் என்றால், ஊழியர்கள் கட்டாயமாக 10 ஆண்டுகள் வரை PF நிதியில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்றும் இடையில் முழு பணத்தை எடுக்க கூடாது என்றும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
EPF கணக்கில் ஊழியரின் பங்கு முழுமையாக PF நிதியிலும், முதலாளியின் (Employer) பங்கில் ஒரு பகுதி EPS (ஓய்வூதிய நிதி) கணக்கிலும் சேமிக்கப்படுகிறது. அதாவது, EPF உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிக்கிறார்கள். மேலும் நிறுவனமும் அதே தொகையை பங்களிக்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில், 8.33% ஈபிஎஸ் கணக்கிலும், 3.67% ஈபிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
மருத்துவச் அவசரங்கள், வீடு வாங்குதல், கல்வி மற்றும் ஓய்வுக்குப் பின் ஓய்வூதியம் பெறுதல் போன்ற பல நன்மைகள் இதில் உண்டு.
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை வேலை மாறும்போது அல்லது வேலையை விடும்போது 10 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே EPS கணக்கில் இருந்து முழுத்தொகையையும் (Form 10C மூலம்) எடுத்துவிட்டால், உங்கள் முந்தைய மொத்த சேவைக்காலம் (Service Continuity) கணக்கில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
அடுத்த நிறுவனத்தில் சேரும்போது உங்கள் பணிக்காலம் மீண்டும் 0-வில் இருந்தே தொடங்கும். இதனால் பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும், உங்களால் 10 வருட மொத்த சேர்க்கப்பட்ட பணிக்காலத்தை அடைய முடியாமல் போய், 58 வயதுக்குப் பிறகு கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்.
அதாவது நடுவில் முழுப் பணத்தையும் எடுக்கும்போது பணிக்காலத்தில் இடைவெளி ஏற்பட்டு தகுதி காலம் குறைகிறது. இதனால் இடைவெளி ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கணக்கில் வராமல் போகலாம். இதன் காரணமாக ஓய்வுக்குப் பின் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறும் வாய்ப்பை ஊழியர்கள் இழக்க நேரிடும் என்று EPFO எச்சரித்துள்ளது.
எனவே ஊழியர்கள் அவசரத் தேவைகளுக்கு முழுப் பணத்தையும் எடுக்காமல் பகுதி தொகையை மட்டும் பெறுவது நல்லது. பணிக்காலத்தின் பலன்களை முழுமையாகப் பெற 10 வருட சேவையைத் தொடர்ந்து பராமரிப்பது அவசியம்.
10 ஆண்டுகள் முடியும் முன் வேலையை விட்டு விலகி, தற்காலிகமாகப் பணிபுரியாமல் இருந்தால், Form 10C மூலம் பணத்தை எடுப்பதற்குப் பதிலாக "Scheme Certificate" பெற விண்ணப்பிக்கலாம். இது உங்களின் முந்தைய சேவைக்காலத்தைப் பாதுகாத்து, அடுத்த வேலையில் சேரும்போது அதை இணைத்துக் கொள்ள உதவும்.
மேலும் அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.
ஊழியர்கள் தங்களின் EPF கணக்கு பதிவுகள் (Passbook Entries)மற்றும் சேவை பதிவேட்டை (Service record) அவ்வப்போது சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.
2025-2026 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டிவிகிதம் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இந்த மாதம் அளித்தது. இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஊழியர்கள் அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து முடிவெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் உங்களுக்கு PF கணக்கு இருந்தால், உங்கள் UAN, ஆதார் மற்றும் KYC தகவல்களைத் தவறாமல் சரிபார்க்கவும். உங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக வைத்திருப்பதும் முக்கியம், ஏனெனில் அவை டிஜிட்டல் PF சேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.