

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல், இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதேசமயம் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டின் 13 தொகுதிகளில் 20% வாக்குப்பதிவைக் கடந்துள்ளன. இந்நிலையில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள் பேருந்து இல்லாத காரணத்தால், நேற்று மாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர.
சொந்த ஊர் செல்லும் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருப்பினும் நேற்று மாலை முதல் கிளாம்பாக்கத்தில் மதுரை, திருச்சி வழியாக செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் இல்லாத காரணத்தினால் பயணிகள் பலரும் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகளுக்காக வாக்குப்பதிவை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என விஜய் குரல் கொடுத்துள்ளார்.
பேருந்துகள் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் போனால், அது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். ஆகையால் சிறப்பு பேருந்துகளை உடனடியாக அரசு இயக்க வேண்டும் எனவும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், “சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் தவிக்கின்றனர். பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பொது மக்களுக்கு உடனடியாக சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் காரணமாக பாதிக்கப்படும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை தேர்தல் ஆணையம் நீட்டிக்க வேண்டும்” என விஜய் எழுதியுள்ளார்.