

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில் காவிரி பிரச்சினை மற்றும் பயிர்க் காப்பீடு தொடர்பான கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
இன்று சட்டமன்றம் வருகை தந்த முதல்வர் விஜய், வேட்டி சட்டை அணிந்து வந்தார். கடந்த 3 வெள்ளிக்கிழமையும் வேட்டி சட்டையில் முதல்வர் வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டப் பேரவைத் தொடங்கியதும் நடப்பாண்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதித்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். காவிரி விவாகரத்தில் அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை, குறுவை சாகுபடி நிவாரணம் எப்போது வழங்கப்படும் மற்றும் பயிர்க் காப்பீடு தள்ளுபடி உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், “காவிரி விவகாரத்தில் துளியும் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. மேகதாது அணை குறித்து நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். அடுத்த நாளே அதனை கடிதமாக பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். காவிரியில் நமது உரிமையை அரசு விட்டுத்தராது.
பெங்களூர் செல்ல முடிவெடுத்தது முற்றிலும் என்னுடைய முடிவு தான். ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முயற்சியை எடுத்தேன். இதில் அவமானம் ஏற்பட்டால், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான விமர்சனங்கள் அனைத்தையும் நான் கவனித்தேன். பகை நாடுகளுக்கு இடையில் பிரச்சினை என்றாலே பேசிப் பார்த்தால் தீர்வு கிடைக்கும் போது, பக்கத்து மாநிலம் தானே, பேசிப் பார்ப்போம் என நான் தான் முடிவெடுத்தேன்” என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவிற்கு செல்லவிருப்பதாக இருந்தது. கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமாரை நேரில் சந்தித்து காவிரி பிரச்சனையில் சுமுகமான முடிவை எடுக்க நினைத்தார் முதல்வர். ஆனால் தமிழக முதல்வர் கர்நாடகாவிற்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் விஜய்யின் வருகையையொட்டி கர்நாடகாவில் போராட்டமும் நடைபெற்றது. அந்த நேரத்தில் முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படமும் பாதி தியேட்டர்களில் நிறுத்தப்பட்டன. அரசியல் சூழல்கள் சரியாக இல்லாததால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என டி.கே.சிவகுமார் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கெண்டார். வேறு தேதியில் சந்தித்துப் பேசலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் முதல்வர் விஜய்யின் கர்நாடகா பயணம் ரத்தானது.
இந்தப் பிரச்சினை அடங்குவதற்குள் கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததில் கபினி அணை நிரம்பியது. வெள்ளப்பெருக்கைத் தடுக்க கபினி அணையை கர்நாடகா திறந்து விட்டதால், தமிழ்நாட்டிற்கு ஓரளவு நீர்வரத்து கிடைத்தது.
இருப்பினும் காவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடகா தீவிரமாக உள்ளது. ஆனால் இதனைத் தடுக்க தமிழக அரசு முழு வீச்சுடன் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.