ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்தியாவில் யுபிஐ (UPI - Unified Payments Interface) என்பது வெறும் ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, இன்று அனைவருமே யுபிஐ பரிவர்த்தனைகளை மிக எளிதாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சில நொடிகளில் பணத்தைப் பரிமாறிக்கொள்ளும் வசதி இருப்பதால், நாளுக்கு நாள் யுபிஐ பயன்பாடு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் கையாள்வது, சர்வர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுகின்றன.
இந்தச் செலவுகளை சமாளிக்க யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் எம்டிஆர் கட்டணம் அறிமுகப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரூ.2,000-க்கும் அதிகமான தொகைக்கான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளில் (UPI கட்டணம்) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரூ.2,000 வரையிலான யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் எந்தவிதமான நேரடி அல்லது மறைமுக சேவை கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. பணம் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் (Payment and Settlement Systems Act, 2007) கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ. 2,000 வரையிலான சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அதாவது, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது சாமானிய பொதுமக்களை/வாடிக்கையாளர்களைப் பாதிக்காது; அந்த பெரிய தொகையை யூபிஐ மூலம் ஏற்றுக்கொள்ளும் வியாபாரிகளிடம் மட்டுமே வசூலிக்கப்படும்.
யுபிஐ(UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு இடையே, நிதிச் சேவைகள் துறை முக்கியத் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.
இருப்பினும், ரூ. 2,000-க்கும் அதிகமான பெரிய அளவிலான வணிக பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் 'மர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்' (MDR) கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாசலை இந்த அறிவிப்பு திறந்துவிட்டுள்ளது.
மேலும் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் விரிவுபடுத்துவதுடன், சில்லறை பணத்திற்கான தேவையை குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2025-26 ஆம் ஆண்டில், நடந்த யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஒப்பீட்டளவில் ரூ.2000க்கு கீழ் பரிவர்த்தனை செய்வோரே அதிகம். எனவே இந்த வரி விலக்கு சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. சாமானிய மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கூடுதல் சுமையும் இன்றி இலவசமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதை இது உறுதி செய்கிறது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்த கட்டணங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 முதல் யூபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் கட்டணமின்றி இயங்கி வருகின்றன. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யூபிஐ தளம் 2,451 கோடி பரிவர்த்தனைகள் (மதிப்பு: ரூ. 29.82 டிரில்லியன்) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.