

நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே மாணவர்களின் பகுப்பாய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' (Out of the Box Thinking - OOBT) இலவச கணிதப் பயிற்சித் திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் சார்பில் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் (IITM Pravartak Technologies Foundation) பள்ளி, கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கடையே திறனை வளர்க்க பல்வேறு பாடத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த இலவச பயிற்சி திட்டத்தில் சேர/விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 6-ம்தேதி கடைசி நாளாகும். வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 7-ம்தேதி அன்று தொடங்குகின்றன. கூடுதல் விவரங்களுக்கு IITM Pravartak இணையதளத்தைப் பார்க்கவும்.
முக்கிய விவரங்கள் :
பாடத்திட்டம்: கணிதம் மூலம் சிந்தனை திறனை வளர்க்கும் 10 வார ஆன்லைன் பயிற்சி. அவ்வப்போது பயிற்சிகள் (Assignments) வழங்கப்படும்.
கட்டணம்: முற்றிலும் இலவசம்.
கால அளவு: மொத்தம் 4 நிலைகள் (Levels) உள்ளன. ஒவ்வொரு நிலையும் 10 வாரங்கள் நடக்கும்.
கலந்து கொள்ள தகுதியானவர்கள் : 5 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணிதத்தில் ஆர்வம் உள்ள எவரும் இதில் சேரலாம்.
இந்த பயிற்சி திட்டத்தின் முதல் நிலையில் புதுமை சிந்தனை, புதிர்களை தீர்ப்பது, எண்களின் வரிசைமாற்றம், தேதி எண்களின் வரிசை மாற்றம், ஒற்றை-இரட்டை எண்கள், தலைமைத்துவ திறன், கணித அறிவு மேம்பாடு, மறைப்புக் கணிதம் மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து சிந்தனையை வளர்க்கும் சுவாரஸ்யமான முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
கற்றலில் ஆர்வமுள்ள எவரும் இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தில் இணையலாம். மாணவர்கள் வாரத்திற்கு 2 மணி நேரம் வீதம், 10 வாரங்கள் இணையவழியில் பயிற்சி பெற வேண்டும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவுசெய்ய : https://iitmpravartak.org.in/out-of-box-thinking
பயிற்சியை நிறைவு செய்த பிறகு, விருப்பமுள்ளவர்கள் மட்டும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்று ஐஐடி பிரவாரக் சான்றிதழ் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அதாவது, பயிற்சி முடிவில் விருப்பமுள்ளவர்கள் நேரில் எழுதும் தேர்வில் கலந்து கொண்டு மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்.
பயிற்சி மற்றும் கற்றல் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு விருப்ப அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணிதம் என்பது சரியான விடையை கண்டறிவது மட்டுமல்ல, அது பல்வேறு சிந்தனை முறைகளை ஆராய்வதும், கோட்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்வதுமாகும்.
ஐஐடி மெட்ராஸ் எடுத்திருக்கும் இந்த இலவச முனனெடுப்பின் மூலம், தரமான கணித கல்வியை ஒவ்வொரு கற்பவருக்கும் கிடைக்க செய்யவும், வழக்கமான முறைகளுக்கு அப்பால் சிந்திக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கவும் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை ஐஐடியில் இயங்கி வரும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளி, வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்அப் உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான 1 வார நேரடிப் பயிற்சிப் பாடத்திட்டம் வரும் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 27) கடைசி நாளாகும்.
ஏஐ சார்ந்த புதுமையான யோசனைகளை சிறந்த தொழிலாக மாற்ற விரும்புவோருக்கு உதவும் வகையில் இந்த சிறப்புப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு பி.டெக், பிஎச்.டி மாணவர்கள், எம்.டெக், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், தயாரிப்பு மேலாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் புதிய ஏஐ ஸ்டார்ட்அப் தொடங்க விரும்புவோர் இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் இறுதி நாளில் பங்கேற்பாளர்கள் தங்களது ஏஐ ஸ்டார்ட்அப் யோசனைகளை சமர்பிக்க வேண்டும். அதில் சிறந்த ஏஐ ஸ்டார்ட்அப் யோசனைக்கு ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.