

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கியமாக ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. ரெயில்களில் கல்வி, வேலை, சொந்த வேலை காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியாவில் ரெயில் பயணம் பாதுகாப்பானது, விலை மலிவானது மற்றும் சௌகரியமானது. அதாவது பேருந்து மற்றும் விமான சேவைகளை விட ரெயில் கட்டணம் குறைவு, அதே சமயம் நீண்ட தூர பயணங்களுக்கு சௌகரியமானது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
மேலும் IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் போன்ற பல வசதிகளையும் ரெயில் சேவையைல் எளிதாகப் பெறலாம் என்பதால் ரெயில் பயணம் பலரின் முதல் தேர்வாக உள்ளது.
ரெயிலில் பயணம் செய்வதன் மூலம், உங்கள் பட்ஜெட்டை மீறாமல் அதிக தூரத்தை கடக்க முடியும். நீண்ட தூர பயணத்தின்போது அலுப்பு, சோர்வு, உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரெயில்கள் தான் சரியான தேர்வு.
ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியன் ரெயில்வே, அடிக்கடி ரெயில் பயணம் செய்யும் மக்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்ய உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரெயில் பயணிகள் இலவச டிக்கெட், தேநீர், சிற்றுண்டிகள் மற்றும் உணவு போன்ற வசதிகளைப் பெற முடியும்.
இதன் மூலம் பயணிகள் இந்தியன் ரெயில்வேயின் வசதிகளை இலவசமாகப் பெற முடியும் என்பதுடன் ஒவ்வொரு பயணத்திற்கும் வெகுமதிகள் கிடைக்கும். இதற்கான இந்தியன் ரெயில்வே ஒரு விசுவாசத் திட்டத்தை ( loyalty program ) தொடங்க உள்ளது.
விசுவாசத் திட்டத்தின் கீழ், அடிக்கடி ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளைப் பணத்தைப் போல ரெயில் பயணிகள் பயன்படுத்தலாம். இந்த வெகுமதி புள்ளிகள் மூலம் பயணிகள் உணவு முதல் பயணக் கட்டணம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது பயணிகள் பயணிக்கும் தூரம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்கள் பெறும் வெகுமதி புள்ளிகளும் (Rail Points) அதிகரிக்கும்.
பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, பெற்ற வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் அடிப்படைக் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம் அல்லது ஒரு முழுமையான பயணச்சீட்டை இலவசமாகப் பெறலாம். அதேபோல, பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரெயிலில் இ-கேட்டரிங் மூலம் இலவசமாக ஆர்டர் செய்ய முடியும். மேலும் தங்கள் பயணத்தின்போது ரெயில் நிலையத்தின் சொகுசு ஓய்வறைகளில் இலவச உணவை உண்டு மகிழவும் முடியும். அதுமட்டுமின்றி வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் டிக்கெட்டுகளை மூன்றாம் ஏசி-யிலிருந்து இரண்டாம் ஏசி-க்கும், இரண்டாம் ஏசி-யிலிருந்து முதல் ஏசி-க்கும் மாற்றிக்கொள்ளவும் முடியும்.
இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரெயில்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு டிஜிட்டல் அமைப்பை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சாலை மற்றும் விமானப் பயணங்களுக்குப் பதிலாக ரெயில் பயணத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பயணிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இது 7,000க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களையும், 3,500 கி.மீ. தூரத்தைக் கடக்கும் ரெயில்களையும் உள்ளடக்கி, தினமும் 3 கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் திட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் உலகின் மிகப்பெரிய லாயல்டி திட்டமாக இருக்கும் என்று இந்திய ரெயில்வே கூறுகிறது.