

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 5 கிலோ, 10 கிலோ எடையிலான சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளன.
வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி (கேஸ் சிலிண்டர்)தொடர்பாக இன்டேன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீங்கள் ஆர்டர் செய்த நான்கு மணி நேரத்திற்குள் சிலிண்டர் உங்கள் வீடு தேடி வந்து சேரும். மேலும் இந்நிறுவனம் எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவை மற்றும் 10 கிலோ எடையைக் கொண்ட 'எக்ஸ்ட்ராலைட்' (XTRALITE) சிலிண்டர் சேவையையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்தச் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் மிகக் குறுகிய நேரத்தில் எரிவாயுவைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் விநியோகம் மற்றும் குறைந்த ஆவண நடைமுறைகள் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
அதாவது இனிமேல் 10 கிலோ சிலிண்டராக இருந்தாலும் சரி அல்லது 5 கிலோ சிலிண்டராக (5 கிலோ 'சோட்டா' (Chhotu))இருந்தாலும் சரி, இரண்டும் வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளேயே உங்களுக்குக் கிடைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைபர் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டர் எடை குறைவாக இருப்பதால் கையாள்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக 5 கிலோ சிலிண்டரை பதிவு செய்யும் போது வைப்புத் தொகையுடன் சேர்த்து 3,500 ரூபாயும், 10 கிலோ சிலிண்டர் முன்பதிவுக்கு 5,002 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை சிலிண்டர்களுக்கு மத்திய அரசின் மானியம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இன்டேன் 'எக்ஸ்ட்ராலைட் நவ்' (XtraLite) 10 கிலோ எடையைக் கொண்ட புதிய இலகுரக கலவை சிலிண்டர், சமையல் எரிவாயு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும். நகர்ப்புற குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் சிறிய குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப நெகிழ்வான, வசதியான எல்பிஜி சேவைகளை வழங்கும் இந்தியன் ஆயிலின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது.
இன்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ், மேம்பட்ட கலவை சிலிண்டர் தொழில்நுட்பத்தையும், தடையற்ற மற்றும் மேம்பட்ட சேவை முறையையும் இணைத்து, புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் அதிக வசதியான எல்பிஜி அனுபவத்தை வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான டெலிவரி நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யலாம்.
தற்போது முதற்கட்டமாக புனே, குருகிராம், இந்தூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இன்டேன் நிறுவனம் தனது எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஆகஸ்டு மாத மத்தியில் இருந்து மேலும் 25 நகரங்களும், அக்டோபர் இறுதிக்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நான்கு மணி நேரத்திற்குள் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை விரிவுபடுத்த இன்டேன் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சேவை அதிகமான மக்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்திற்கேற்ற எரிசக்தி தீர்வுகளை வழங்குவதிலும், வாடிக்கையாளர் சேவையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதிலும் இந்தியன் ஆயில் உறுதியாக செயல்படுகிறது என்று இந்நிறுவனத்தின் (சந்தை) இயக்குநர் சவுமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
இன்டேன் வினியோகஸ்தர் வரைலமைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் ஆயில் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த சேவை வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதேபோன்று, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் சென்னையில் கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், மீனம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி மற்றும் IndianOil Customer இணையதளம் மூலம் புதிய இணைப்புகளை பெறவும், சிலிண்டர் முன்பதிவு செய்யவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டேன் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய, முதலில் உங்கள் மொபைல் போனில் இருந்து IndianOil ONE செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் 5 அல்லது 10 கிலோ சிலிண்டர்களை எளிதாக முன்பதிவு செய்து நான்கு மணிநேரத்தில் இந்த சேவையை பெறலாம்.
மேலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cx.indianoil.in மூலமாகவும் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இன்டேன் நிறுவனம் விரைவில் 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் எக்ஸ்பிரஸ் டெலிவரி (Express Delivery) சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.