

கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கிட்டத்தட்ட 81 நாடுகளைச் சேர்ந்த 240 க்கும் மேலான படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்த விழாவில் தமிழ்மொழி படமான அமரன் முதலில் திரையிடப்பட இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை மிக தருணமாகும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமரன் திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இன்று கோவாவிற்கு சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக அமரன் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அமரன். இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவருடயை மனைவி இந்துவாக சாய்பல்லவியும் நடித்தனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. உலக அளவில் அமரன் திரைப்படம் ரூ.350 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமும் இதுதான்.
கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' என்ற விருதை அமரன் திரைப்படம் வென்றது. இதுதவிர இன்று தொடங்கியுள்ள இந்தியாவின் கோவாவில் நடைபெற உள்ள 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், 'அமரன்' திரைப்படம் தங்க மயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த விழாவில் பனோரமா பிரிவின் கீழ், முதல் திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்பட இருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகும். இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது கோவாவிற்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டிற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் திரைப்படங்கள் பட்டியலிலும் 'அமரன்' திரைப்படம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.