நாட்டின் பிரபல கதிரியக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆற்காடு கஜராஜ் அவர்களின் 19வது ஆண்டு நினைவு சொற்பொழிவு கருத்தரங்கம் நேற்று சென்னை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பிரபல நீரிழிவு டாக்டர் வி.மோகன், பிரபல மகப்பேறு டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ், சிறுநீரகவியல் துறை டாக்டர் P.B. சிவராமன் மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஸ் அதிகாரி சைலேந்திர பாபு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐபிஸ் அதிகாரி சைலேந்திர பாபு பேசுகையில்,“பேராசிரியர் ஆற்காடு கஜராஜ் இன்றைய மருத்துவர்களுக்கு ஒரு தலைவராக விளங்குகிறார். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம். டாக்டராக இருப்பவர்கள் நல்ல தலைவர்களாக மற்றவர்களுக்கு உந்து சக்தி அளிக்கும் இன்ஸ்பிரேஷன் லிடராக இருக்கவேண்டும்.
மருத்துவர்கள்தான் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்கள். மக்கள் தங்களுடைய நாட்களை நம்பிக்கையுடன் கடத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மருத்துவர்கள்தான்” என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பிரபல நீரிழிவு டாக்டர் வி. மோகன் ‘இந்தியாவை நீரிழிவு இல்லாத நாடாக மாற்றமுடியும் என கூறுவது சாத்தியமா என்ற தலைப்பியில் கருத்துரை ஆற்றினார். அவர் பேசுகையிர், “இன்றைய காலத்தில் நிறையபேர் அறிவியல்பூர்வமான மருத்துவ முறைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அலோபதி மருத்துவ துறை மீது பல விமர்சனங்கள் சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு போன்றவர்கள் அறிவியல்பூர்வமான மருத்துவ முறையை ஊக்குவிப்பது என்னை போன்ற டாக்டர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நம்முடைய நாட்டில் நீரிழிவு தொடர்பாக 1972ம் ஆண்டு நகரங்களில் இருபது வயதிற்கு கீழ் உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 2.3 சதவீத பேருக்கும் கிராமப்புறங்களில் 1.5 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் இருந்தது. ஆனால், தற்போது சென்னையில் இருபது வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவர்களில் 30 சதவீதம் பேருக்கு நீரிழிவு பிரச்சனை உள்ளது. ஆதாவது மூன்றில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சிலர் இதனை பொய் என கூறுகிறார்கள். மருத்துவ துறையில் வியாபாரத்திற்காக இதுபோன்ற தவறான தரவுகள் பரப்பப்படுகிறது என்கிறார்கள். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி நாட்டின் நீரிழிவு நோயின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்ந்துள்ளதை கண்கூட காணமுடிகிறது.
அதேபோல், மரபணு ரீதியாக காரணமாக நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து இருப்பதைவிட நம்முடைய சுற்றுசூழல் காரணிகளில்தான் அதிகளவு நீரிழிவு நோய் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக முன்பெல்லாம் சாலைகளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தற்போது டிவிகள் முன்பும், செல்போன்கள் முன்பு அமர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியே சென்று விளையாடுவது என்பதை பெரும்பாலும் அழிந்துவருகிறது. அதேபோல் மாறியுள்ள உணவு பழக்கம், இரவுநேர வேலை முறை ஆகியவை காரணமாக உடலில் அதிகபடியாக கார்போஹைட்ரேட் உருவாகிறது. அதேபோல், குறைந்தளவு உடல் உழைப்பு மற்றும் அதிகபடியாக நகரமயமாக்கல் காரணமாக உருவாகும் காற்று மாசு காரணமாகவும் நீரிழிவு அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவில் அதிகளவு கார்போஹைட்ரேட் அதிகளவு உள்ள அரிசியை நிறைய எடுத்துக்கொள்ள தொடங்கி இருப்பதும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கமுடிகிறது.
அரிசியை உணவாக எடுத்துக்கொள்பவர்கள் தயவுசெய்து நடைபயிற்சி செய்யவேண்டும். இதனால், நீரிழிவு பாதிப்பு குறையும். நீரிழிவு நோயால் வரும் இதயம், சிறுநீரக பாதிப்பு மற்றும் கண் பார்வை குறைபாடு தற்போது அதிகரித்துள்ளது.
நீரிழிவு நோய் இல்லாத நாடாக இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு நாடும் இருக்க முடியாது. ஆனால், நீரிழிவு நோயால் வரும் இதர உடல் பாதிப்புகளை நிச்சயமாக தடுக்க முடியும் என்பது சாத்தியமான விஷயமாகும். அதற்கு முதற்கட்டமாக நீரிழிவு பாதிப்பை விரைவாக கண்டறிந்து கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவது. உடலில் சக்கரையின் அளவை குறைப்பது, ரத்த அழுத்தம் 130/ 80 என்ற அளவில் இருப்பதை பார்த்துக்கொள்வது, உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்வது. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மது, புகையிலை போன்ற போதை வஸ்துகளை தவிர்ப்பது உள்ளிட்ட விஷயங்களை சரியாக கடைப்பிடித்துவந்தால் நிச்சயமாக ஒருவருக்கு நீரிழிவு வராமல் தடுக்கமுடியும்.
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 சதவீதம் பேர்தான் நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மீதமுள்ள 93 சதவீதம் பேர் கட்டுப்பாடு இல்லாமல்தான் உள்ளனர். மேலும், நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான சிகிச்சை முறையில் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை, கண் பார்வை குறைபாடு போன்ற இதர பிரச்சனைகள் 50 சதவீதம் கண்டிப்பாக தடுக்கமுடியும்.
அதேபோல், ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் தொடர்ச்சியான சிகிச்சை முறை, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்துவந்தால் நிச்சயமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கூட 100 ஆண்டுகள் வாழுவதற்கான சாத்தியங்கள் உள்ளது” என்றார்.