

இந்திய டெலிகாம் சேவை துறையில் போட்டி என்பது தற்போது வெறும் 4 முனை போட்டியாக மாறியுள்ளது, இதில் 2 நிறுவனங்களின் பங்கு சந்தையில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு என்பதால் ஒட்டுமொத்த வர்த்தக சந்தையும், ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியில் மட்டுமே பங்கீடு செய்து போட்டிப்போட்டு வருகிறது.
இந்திய டெலிகாம் துறையில் தற்போது முக்கியமாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் இரண்டும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும் ரிலையன்ஸ் ஜியோ அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு சந்தையில் முதலிடத்தில் உள்ளதுடன், மலிவான கட்டணத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கட்டண உயர்வு தொடர்பான விவாதம் நீடித்து வரும் நிலையில், தற்போது Base Plan திட்டம் தொடர்பான போட்டி தீவிரமடைந்துள்ளது.
பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற விழாக்காலம் துவங்கும் முன்பு கட்டண உயர்வுக்கான வாய்ப்புகளை ஆராயும், அதன் படி ஏர்டெல் இந்த முறை தனது பேஸ் பிளானான ரூ.299 திட்டத்தை ரத்து செய்தது அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
அதாவது, இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 299 தொடக்க நிலை (Base Plan) ப்ரீபெய்ட் திட்டத்தை அதிரடியாக நீக்கிவிட்டு, வாடிக்கையாளர்களை ரூ. 349 ஆக உயர் திட்டத்திற்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக சுமார் 16% வரை கட்டண உயர்வைச் செயல்படுத்தியுள்ளது.
ஆனால் இதேபோன்ற செயல்பாட்டை ஜியோவும் அறிவிக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முகேஷ் அம்பானியும், அவரது மூத்த மகனுமான ஆகாஷ் அம்பானி எதிர்பார்ப்புக்கு மாறாக, டெலிகாம் துறைக்கு டிவிஸ்ட் கொடுத்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.299 அடிப்படை திட்டத்தை தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.300 செலுத்தும் Jio Prime உறுப்பினர் திட்டத்தையும் (Jio Prime Membership) தொடர்கிறது. அதாவது அடுத்த ஆண்டு (2027) செப்டம்பர் 5-ம்தேதி வரை கட்டண உயர்வில் இருந்து பாதுகாப்பு வழங்கும் ரூ. 300 ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜியோ பிரைம் என்பது வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யக்கூடிய திட்டமாகும். இதை ரீசார்ஜ் செய்தால் ஜியோ வாடிக்கையாளர் தற்போதை விலை நிலையில் இருக்கும் திட்டங்களை வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்துக்கொள்ள முடியும். இதனால் கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை வழக்குகிறது.
மேலும் பிரைம் உறுப்பினர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வவுச்சர்கள், முன்னுரிமை வாடிக்கையாளர் சேவை மற்றும் புதிய சேவைகளுக்கான முன் அனுமதிகள் கிடைக்கும். இதன் மூலம் எதிர்கால கட்டண உயர்வுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும்.
ஜியோவின் IPO திட்டமும், வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) உயர்த்தவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எதிர்காலத்தில் மேலும் 10% முதல் 15% வரை ஒட்டுமொத்த கட்டண உயர்வு இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால் சந்தையில் பேஸ் பிளான் போட்டி தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, ஏர்டெல் தனது பிரபலமான ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ள போதிலும், வோடபோன் ஐடியா (Vi) தங்களின் 28 நாள் 1 ஜிபி டேட்டா உடன் ரூ.299 திட்டத்தை தொடர்ந்து நீக்காமல் வழங்கி வருகிறது.
ஏர்டெல் தனது கட்டணங்களை உயர்த்தியதால், ஏர்டெல் எண்ணை விட்டு விலகும் வாடிக்கையாளர்களை ஈர்க்க Vi (வோடபோன் ஐடியா) புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க Vi முயல்கிறது. மேலும் ஏர்டெல்லை விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள் பிரீமியம் சேவை வேண்டுமென்றால் ஜியோவை நாடுவார்கள்.
ஆனால் நிலையான சேவையே போதும் என்று நினைக்கும் Base Plan வாடிக்கையாளர்கள் வோடபோன் ஐடியாவுக்கு வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இதை அடிப்படையாக கொண்டே Vi தனது 299 ரூபாய் திட்டத்தை நீக்காமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த மாற்றத்தின் முழுமையான மற்றும் உண்மையான தாக்கத்தைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு, குறைந்தது ஒரு காலாண்டு காத்திருந்து வாடிக்கையாளர்கள் மாற்றம் தொடர்பான தகவல் வாயிலாக மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.