

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மூத்த நிர்வாகிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. அதிமுகவின் தேர்தல் தோல்வியே இதற்கு மிக முக்கிய காரணம்.
கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியைப் பெற முடியாத காணத்தால், அதிமுக தலைமை மீது எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி எம்எல்ஏக்களும் அக்கட்சியை விட்டு விலகினர். இதில் ஆறு எம்எல்ஏக்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்கனவே மூன்று கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். ஆனால் இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் இபிஎஸ்ஸையும் அழைத்துள்ளார் சபாநாயகர்.
இதன்படி வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நான்காம் கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 6 எம்எல்ஏக்களும் சுய விருப்பத்தின் பேரில் தான் ராஜினாமா செய்தோம் என சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கள் தரப்பு விளக்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பாகவே தெரிவியுங்கள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஒரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கலாம் என அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் கூட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவின் ஒரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர். இதனால் சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பினர் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மீண்டும் ஒன்றாக இணைந்தனர். இருப்பினும் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தவெக-வில் இணைய இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து விசாரணை நடைபெற்று வருவதால் தான், தமிழகத்தில் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை
வருகின்ற ஜூலை 30-ம் தேதி ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள், பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கவுள்ளனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி வருவதால், நான்காம் கட்ட விசாரணையின் போது இபிஎஸ் இதில் பங்கேற்பாரா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை இபிஎஸ் வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக அதிமுக சட்ட ஆலோசகர்கள் சபாநாகரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த 6 எம்எல்ஏக்களும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தான் ராஜினாமா செய்தோம் என சபாநாயகர் முன்பு தெரிவித்தால், உடனடியாக அவர்கள் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படும்.
இதனால் ஜூலை 30-ல் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.