

பல்வேறு புதிய திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சற்றுமுன் நாகர்கோவிலில் ரூ.1,785 மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார் தமிழக முதல்வர். அப்போது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.
கன்னியாகுமரியில் ரூ.30 கோடி செலவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சுமார் 61,500 சதுர அடியில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்காவின் மூலம், 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு எனது சக்திக்கும் மீறி உழைத்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டு கொண்டே இருக்கிறது. 14 வயதில் இருந்து அரசியலில் பயணித்து வருகிறேன். கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து உழைத்ததன் பலனாக தான் தற்போது நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.
தமிழ்நாட்டில் நான் போகாத ஊரே இல்லை என்பதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறேன். மகளிர் உரிமைத் தொகையை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க சூழ்ச்சி நடந்தது. ஆனால் மக்களுக்கான நம்முடைய அரசு, அந்த சூழ்ச்சிகளை எல்லாம் வென்று விட்டது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இஸ்ரோவிற்கு பல தலைவர்களை கொடுத்துள்ள மாவட்டம் கன்னியாகுமரி. நம்முடைய ஆட்சியில் கன்னியாகுமரியில் ஏழு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் 6 அறிவிப்புகள்:
* கன்னியாகுமரி மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.28.20 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* கல்குளம் வட்டத்தில் தூய மரிய பசிலிக்கா தேவாலயம் புனரமைக்கப்படும்.
* களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலை அகலப்படுத்தப்படும்.
* மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் திரும்ப வரவில்லை என்றால், அவர்களின் குடும்பத்திற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதிதாக ஐடி பார்க் அமைக்கப்படும்.