

கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் சாச்சா கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்தவர் ஹரிஷ் ராய். பலரும் கேஜிஎஃப் படத்தில் இவரது நடிப்பை பாராட்டினர். கடந்த சில மாதங்களாக தைராய்டு புற்றுநோயுடன் போராடி வந்த ஹரிஷ், இன்று கிட்வாய் மருத்துவமனையில் காலமானார்.
இவருடைய தற்போதைய வயது வெறும் 55 மட்டுமே. இவரது திடீர் மறைவு கன்னட ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையில் உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஹரிஷ், திரைக்கு வெளியே அமைதியாகவே இருப்பார். தைராய்டு புற்றுநோய் வயிற்றிற்கு பரவியதால் கடுமையான வீக்கம் ஏறபட்டு, உடலளவில் பலவீனம் அடைந்தார் ஹரிஷ். பல மாதங்களாக இவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த மாதம் ஹரிஷ் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவைப் பகிர்ந்தார். அதில் சிகிச்சை செலவுகள் குறித்த துயரத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். தைராய்டு புற்றுநோய்க்கான ஒரு ஊசி மட்டும் ரூ.3.55 லட்சம் என அவர் தெரிவித்திருந்தார. மேலும் முழு சிகிச்சை செலவுகளையும் சேர்த்து ரூ.70 லட்சம் வரை தன்னுடைய சிகிச்சை செலவு உயர்ந்து விட்டது என கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில், “நான் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ரசிகர்கள் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என பணிவுடன் கூறியிருந்தார்.
ரசிகர்களிடம் உதவி கேட்ட அவரது மன தைரியம் லட்சக்கணக்கானோரின் மனதை வென்றது. ஆனால் ரசிகர்களின் பிரார்த்தனைகளால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது துரதிஷ்டமே. 1990 காலகட்டத்தில் இருந்து, இன்றைய இளம் தலைமுறை படங்கள் வரை ஹரீஷ் ராய் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதில் கே.ஜி.எஃப் 1 மற்றும் 2 இல் சாச்சாவாக நடித்த இவரை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதுதவிர சமரா, பெங்களூர் அண்டர்வேர்ல்ட், ஜோடிஹக்கி, ராஜ் பகதூர், சஞ்சு வெட்ஸ் கீதா, ஸ்வயம்வரா மற்றும் நல்லா உள்ளிட்ட படங்களிலும் ஹரிஷ் ராய் தனது பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தினார். உண்மையான உணர்வுகளுடன் ஹரிஷ் சினிமாவில் நடித்தவர் என்பதால் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.
ஹரீஷ் ராய் தனது மனைவி மற்றும் இரு மகன்களைத் தனியாக தவிக்க விட்டுச் சென்று விட்டார். என் நிலைமை மோசமாகி விட்டால் உடனே நடிகர் யாஷை தொடர்பு கொள்ளுங்கள் என ஏற்கனவே குடும்பத்தாரிடம் தெரிவித்து இருந்தார் ஹரிஷ். யாஷ் ஏற்கனவே ஒருமுறை ஹரிஷ் ராய்க்கு உதவியிருந்ததால், மீண்டும் அவரிடம் உதவி கேட்க ஹரிஷ் ராய்க்கு மனம் வரவில்லை.
இருப்பினும் யாஷை ஒரே ஒருமுறை அழைத்தால் கூட எனக்கு உதவத் தயாராக இருப்பார் என தனது மனைவியிடம் சொலலி வைத்திருந்தார். தற்போது ஹரிஷ் ராயின் மறைவு கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரது புகழ்பெற்ற காட்சிகளை பகிர்ந்து, “சாச்சா எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார்” என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.