

அதிக நேரம் செல்போன் பார்ப்பது கை மற்றும் கால் நரம்புகளைப் பாதிக்கும் என்று நரம்பியர் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழுத்தை ஒரே கோணத்தில் தொடர்ந்து தாழ்த்தி வைப்பதால், நரம்புகள் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பலவீனம் உண்டாகலாம்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், 'கார்பல் டன்னல் சிண்ட்ரோம்' (Carpal Tunnel Syndrome - CTS) என்னும் நரம்பு பாதிப்பு (நரம்பு அழுத்தம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நரம்பியர் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் தவறான கோணத்தில் வைத்தும், ஒரே மாதிரியான கை அசைவுகளுடனும் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் அதிக ஆபத்தைச் சந்திக்கின்றனர்.
ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறிகளைப் பல மாதங்களாகக் கவனிக்காமல் புறக்கணிப்பதே, இளைஞர்களுக்குக் கடுமையான நரம்பு அழுத்தம் ஏற்படுவதற்குக் முக்கியக் காரணம் என்கின்றனர்.
மணிக்கட்டில் உள்ள கார்பல் டன்னல் (carpal tunnel) எனப்படும் குறுகிய பாதை வழியாகச் செல்லும் மீடியன் நரம்பு (median nerve) அழுத்தப்படும்போது CTS ஏற்படுகிறது.
அதேபோல் நம் தலையின் இயல்பான எடை சுமார் 5 கிலோ ஆகும். கழுத்துத் தசைகளே தலையைச் சரியாகத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆனால், நாம் செல்போனைப் பார்க்கக் கழுத்தை முன்னோக்கி வளைக்கும் போது, அந்த எடை உயர்ந்து கழுத்தின் மீது 27 கிலோ வரை அழுத்தத்தைக் (Biomechanical overload) கொடுக்கிறது.
இதனால் கழுத்து பகுதியின் உள்ளே வரக்கூடிய அழுத்தம் அதிகமாகிறது. இந்த அழுத்தத்தால் கழுத்தில் விறைப்புத்தன்மை (stiffness) ஏற்படலாம். இதனால் கழுத்தில் இருந்து கைகளுக்கு வலி பரவலாம்.
பரேஸ்தீசியா (Paresthesia), அதாவது ஊசி குத்துவது போன்ற கூச்ச உணர்வு, மரத்துப்போதல் (நம்மத்கல்) அல்லது அரிப்பு போன்ற அசாதாரணமான உணர்வுகள் ஏற்படலாம். கழுத்தில் இருந்து போகும் நரம்புகளில் எந்த நரம்பு pinch ஆகிறது என்பதை பொறுத்து நமக்கு அறிகுறிகள் தெரியவரும்.
கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள ஜெல்லி போன்ற 'டிஸ்க்' (Disc) பகுதி நரம்புகளை அழுத்தும் போது, அது முதுகெலும்புத் தண்டையும் (Spinal cord) பாதிக்கலாம்.
இதை நாம் கவனிக்காமல் அலட்சியமாக விட்டு விட்டால் நம்முடைய நரம்பு தண்டில் அழுத்தம் ஏற்படலாம். அப்படி அழுத்தம் ஏற்பட்டால் நம்முடைய கை, கால்களின் செயல்பாடுகள் குறைவதற்கும், பக்கவாதம் (paralysis), சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதிலும் (urine and motion problem) கூட சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
வலி மற்றும் மரத்துப்போதல் ஏற்படும் இடத்தை வைத்தே இதன் தீவிரத்தை மருத்துவர்கள் கண்டறிவர். கழுத்து அல்லது பிற நரம்புப் பிரச்சினைகளாலும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படலாம், மேலும் தொடர்ச்சியான அசௌகரியம் உள்ளவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை விட மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
முக்கிய அறிகுறிகள்:
கைகளில் எரிச்சல், வலி அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு.
பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் ஒரு பகுதியில் மரத்துப்போதல் மற்றும் கூச்ச உணர்வு (குறிப்பாக இரவில்).
பாதிப்பு அதிகரிக்கும் போது:
விரல்களின் அசைவு குறைதல் மற்றும் பிடிப்புத்திறன் இழப்பு.
கட்டைவிரலின் அடிப்பகுதியில் உள்ள தசைகள் மெலிந்து போதல்.
பொருட்கள் கைநழுவி விழுதல் மற்றும் தூக்கமின்மை.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
செல்போனைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தலையை நிமிர்த்தி ஓய்வு எடுக்க வேண்டும்.
கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு இலேசான பயிற்சிகள் செய்ய வேண்டும்.
அமரும் போது முதுகையும் கழுத்தையும் நேராக வைத்து அமர வேண்டும்.
போனை நேராகக் கண்களுக்குப் நேரே பிடித்துப் பார்க்க வேண்டும். அதாவது, செல்போனைக் கைக்கு மேலே கண் உயரத்திற்கு உயர்த்திக் பார்க்க வேண்டும்; கழுத்தைக் கீழே வளைக்கக் கூடாது.
கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கழுத்து மற்றும் முதுகிற்கான எளிய 'ஸ்ட்ரெச்சிங்' (Stretching) பயிற்சிகளைச் செய்வதன் மூலம் முதுகெலும்பு ஆரோக்கியத்தைப் (Spinal Health) பாதுகாக்கலாம்.
வேலைக்கு நடுவில் சிறிய இடைவேளை எடுப்பது, மணிக்கட்டை நேராக வைப்பது, நாற்காலி மற்றும் மேஜையைச் சரியான உயரத்தில் அமைப்பது, உட்காரும் நிலையைச் சரியாக அமைப்பது மற்றும் மணிக்கட்டுப் பட்டையைப் (Wrist band/splint) பயன்படுத்துவது ஆகியவை பாதிப்பு ஏற்படாமலும் அல்லது லேசான பாதிப்புகளைக் குணப்படுத்தவும் உதவும்.
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்பக்கட்ட அல்லது லேசான பாதிப்புகளுக்கு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி போன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைகளே போதுமானது. ஆனால், பாதிப்பு அதிகமாக இருந்தாலோ அல்லது இந்தச் சிகிச்சைகளில் பலன் இல்லாவிட்டாலோ அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
குறிப்பாக, 'எண்டோஸ்கோபி' முறையில் மணிக்கட்டில் சிறிய துளையிட்டுச் செய்யப்படும் அறுவைசிகிச்சையானது, வழக்கமான பெரிய அறுவைசிகிச்சையை விட விரைவாகக் குணமடைந்து வேலைக்குத் திரும்ப உதவுகிறது.