

இன்று முதல் (செப்டம்பர் 1) எல்பிஜி (LPG) சிலிண்டர் விதிகளில் விலை நிர்ணயம், இ-கேஒய்சி (e-KYC) மற்றும் புக்கிங் இடைவெளி போன்ற முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. உங்களது வீட்டில் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துவதாக இருந்தால் இந்த புதிய விதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதுவும் அரசாங்கம் செயல்படுத்தவுள்ள இந்த மாற்றங்கள் உங்கள் பணப்பையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்று முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்:
விலை மாற்றம்:
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன.
அந்த வகையில், செப்டம்பர் 1-ம் தேதியான இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே சிலிண்டர் விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மாதம் (ஆகஸ்ட்) 1-ம் தேதி 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிணடரின் விலை ரூ.202 குறைக்கப்பட்டது. அதேசமயம் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாய இ-கேஒய்சி (e-KYC):
சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பெறுவோருக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது. மானியம் தங்குதடையின்றி கிடைக்கவும், போலி இணைப்புகளை நீக்கவும், மானியத் தொகை சரியான நபரைச் சென்றடையவும் இ-கேஒய்சி அவசியமாகும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான e-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் (ஆகஸ்ட் 31) முடிந்து விட்டது. குறிப்பாக IOCL, BPCL, HPCL ஆகிய நிறுவனங்கள் இந்த காலக்கெடுவை கடந்த ஆகஸ்ட் 23-ம்தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ம்தேதி வரை நீட்டித்திருந்தது.
இதுவரை e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் இன்று முதல் (செப்டம்பர் 1 ) அதிக விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அல்லது சிலிண்டர் புக்கிங் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்படலாம்.
PNG இணைப்புகளை அதிகரிக்கத் திட்டம் :
வீட்டு உபயோகக் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு புதிய ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் இன்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. இது பாதுகாப்பான மற்றும் வசதியான PNG எரிவாயுவின் பயன்பாடு விரைவாக விரிவடைய வழிவகுப்பதுடன், LPG-யின் பயன்பாடும் குறையும்.
எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு மாற்றாக வீடுகளில் தூய்மையான குழாய்வழி எரிவாயு இணைப்புகளை விரைவாக வழங்குவதும், புதிய பகுதிகளுக்கு நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.
பில் செய்யப்படாத மற்றும் பயன்பாட்டில் இல்லாத PNG இணைப்புகளைச் செயலில் உள்ள இணைப்புகளாக மாற்ற நகர எரிவாயு விநியோக (CGD) நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் ஊக்கமளிக்கிறது.
நாடு முழுவதும் தற்போது சுமார் 1.74 கோடி உள்நாட்டு PNG இணைப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இத்திட்டம் இரண்டு கட்டங்களாக, தலா 6 மாதங்களுக்குச் செயல்படுத்தப்படவுள்ளது. வளைகுடா நாடுகளின் போர் பதற்றம் காரணமாக LPG தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, PNG-யைப் பயன்படுத்தும் வாய்ப்பு முன்னிலைக்கு வந்தது.
LPG இணைப்பை ரத்து செய்வதற்கான 30 நாள் கால அவகாசம்:
நீங்கள் PNG இணைப்பைப் பெற்றிருந்தால், உங்கள் பழைய LPG இணைப்பை (Indane, HP அல்லது Bharat Gas) ரத்து செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்திய அரசின் விதிமுறைகளின்படி, ஒரு நுகர்வோர் ஒரே நேரத்தில் பிஎன்ஜி (PNG - குழாய் வழி சமையல் எரிவாயு) மற்றும் எல்பிஜி (LPG - சிலிண்டர் எரிவாயு) ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க அனுமதி இல்லை.
உங்கள் வீட்டில் பிஎன்ஜி (PNG) இணைப்பு செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து 30 நாட்களுக்குள் உங்களது பழைய எல்பிஜி (Indane, HP, அல்லது Bharat Gas) இணைப்பை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் அல்லது சரண்டர் (Surrender) செய்ய வேண்டும்.
30 நாட்களுக்குப் பிறகும் நீங்கள் எல்பிஜி இணைப்பை ரத்து செய்யவில்லை எனில், உங்களது எல்பிஜி இணைப்பு தானாகவே முடக்கப்படும் (Blocked). மேலும், உங்களுக்கு மானியம் (Subsidy) கிடைத்து வந்தால் அதுவும் நிறுத்தப்படும்.
சிலிண்டர் முன்பதிவு இடைவெளி விதிகள்:
கறுப்புச் சந்தையைத் தடுக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் சிலிண்டர் புக்கிங் செய்யும் இடைவெளியில் புதிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி சில பகுதிகளில் முறையே 25 முதல் 45 நாட்கள் வரை இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் முறையற்ற வழிகளில் வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதைத் தடுக்கவும், கறுப்புச் சந்தையை ஒழிக்கவும் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து டெலிவரி பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அதன்படி நகர்புற வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்கள் இடைவெளியையும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 45 நாட்கள் இடைவெளியையும் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.