

தமிழ்நாட்டில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.
அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அன்று முதல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத பல கோடி ரூபாயை கைப்பற்றினர்.
இன்றுடன் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களில் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,223 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த தினத்திலிருந்து தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டுகளை நடத்தினர். அதோடு சாலை மார்க்கமாகவும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த தினங்களில் ரூ.50,000-கும் மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால், அதற்கு சரியான கணக்கு காட்ட வேண்டும். கணக்கு காட்டப்படாத பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அவ்வகையில் மார்ச் 15ஆம் தேதி முதல் இன்று வரை ரூ. 1,223 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சற்றுமுன் பெரம்பலூரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.44 கோடியை எடுத்துச் சென்ற திமுக நிர்வாகியிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.