

பேருந்து பயணிகள் தங்கள் பயணம் செய்யும் பேருந்து குறித்த தகவல்களை விரைவாக தெரிந்துகொள்ளும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக (MTC) புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக எம்டிசி சென்னை (MTC Chennai) என்ற புதிய மொபைல் செயலி மற்றும் பேருந்து நிறுத்தங்களில் 'பயணிகள் தகவல் அமைப்பு' (PIS) காட்சிப் பலகைகளை அறிமுகப்படுத்த எம்டிசி (MTC) தயாராகி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன், சென்னை நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு (CITS) முன்முயற்சியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய செயலியும், டிஜிட்டல் காட்சிப் பலகைகளும் புதிய தமிழக அமைச்சரவை முழுமையாகப் பொறுப்பேற்ற அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்று MTC நிர்வாக இயக்குநர் டி. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் MTC சென்னை செயலியானது, தற்போதுள்ள சென்னை பஸ் (Chennai Bus) செயலிக்கு மாற்றாக, பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள GPS கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமான நிகழ்நேரப் பேருந்து கண்காணிப்பை வழங்கும்.
பயணிகளின், குறிப்பாக மாற்றுத்திறனாளிப் பயணிகளின் கருத்துக்களைக் கொண்டு இந்தச் செயலி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று, பயணிகள் தாழ்தள பேருந்துகளை (low-floor buses) அடையாளம் காண்பதையும், சரியான ஏறும் இடங்களைக் கண்டறிவதையும் எளிதாக்குகிறது. இது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.
அதேபோல் தற்போது நடைமுறையில் உள்ள சென்னை பஸ் (Chennai Bus) செயலிக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்த செயலியில், சாதாரண, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், தாழ்தள, மின்சார ஏசி பேருந்து என அனைத்து வகை பேருந்துகளையும் வெறும் தடம் எண்ணை (route number) மட்டும் பதிவு செய்து அனைத்து தகவல்களையும் பெறலாம்.
பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துகளைக் கண்டறியவும், சரியான ஏறும் இடத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும், அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளும் வகையிலும், குறிப்பாகப் பெண் பயணிகளுக்காக பாதுகாப்பு வசதியும்(SOS) இதில் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முக்கியப் பணிமனைகளில் 500 பயணிகள் தகவல் காட்சிப் பலகைகள் (PIS) என குறைவான பேருந்துகள் வரும் நிறுத்தங்களில் 2-வரி பலகைகளும், அதிகப் போக்குவரத்து உள்ள இடங்களில் 4-வரி பலகைகளையும் எம்டிசி (MTC) நிறுவியுள்ளது. இந்த டிஜிட்டல் பலகைகள், பயணிகளின், குறிப்பாக ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் நலனுக்காக, பேருந்துகள் வந்து சேரும் உத்தேச நேரங்களைக் காண்பிக்கும்.
குறிப்பாக முக்கியப் பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், கோயம்பேடு (CMBT), அண்ணா சதுக்கம், பெரம்பூர் மற்றும் வடபழனி போன்ற இடங்களில், பேருந்து வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் இரண்டையும் காட்டும் 10-வரி கொண்ட பெரிய தகவல் பலகைகள் அமைக்கப்படும்.
பொது வெளியீட்டிற்கு முன்பு, இந்த PIS அமைப்பு தற்போது இறுதிச் சோதனை மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், எதிர்காலத்தில் MTC Chennai செயலி மூலமாகவே பயணச்சீட்டு (In-app ticketing) பெறும் வசதியையும், ரெட் பஸ் (RedBus) மற்றும் அபி பஸ் (AbhiBus) போன்ற செயலிகள் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தையும் எம்டிசி பரிசீலித்து வருகிறது.