

மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 50 மீட்டர் சுற்றளவிற்குள் 'ஜங்க் ஃபுட்' (junk food) எனப்படும் சத்து குறைவான துரித உணவுகளை விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் சமோசா, வடபாவ், சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'உலக உடல் பருமன் வரைபடம் 2026' (World Obesity Atlas 2026) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4.1 கோடி குழந்தைகள் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குறிப்பாக 5 முதல் 9 வயதுக்குள் சுமார் 1.5 கோடி குழந்தைகளும், 10 முதல் 19 வயதுக்குள் 2.6 கோடிக்கும் அதிகமான சிறார்களும் அளவுக்கு அதிகமான உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டிற்குள் உலகளவிலான சிறுவர் உடல் பருமன் பாதிப்பில் 11 சதவீதத்தை இந்தியா மட்டுமே வகிக்கும் எனச் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2040-ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 56 மில்லியன் இந்தியக் குழந்தைகள் அதிக உடல் எடை கொண்டவர்களாக மாறக்கூடும் என்றும், அதே வேளையில் இளம் வயதிலேயே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது ஏதோ தொலைதூரத்திலோ அல்லது கற்பனையிலோ உள்ள ஆபத்து அல்ல; இது ஒரு முழுத் தலைமுறையுமே, வழக்கமாக வாழ்வின் பிற்காலத்தில்தான் வெளிப்படும் உடல்நலப் பிரச்சினைகளுடன் முதிர்வயதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே குறிக்கிறது.
இதற்கு துரித உணவுகள் (ஜங்க் ஃபுட்) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளல் போன்றவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே, பள்ளிகளில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பள்ளிகள் மற்றும் அதன் அருகில் துரித உணவு விற்பனையைத் தடை செய்யக் கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் (ICMR) பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி வளாகங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு உள்ள உணவுகளை பள்ளிகளில் விற்பனை மற்றும் இந்த உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு, டிரான்ஸ் ஃபேட் (trans fat) மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பொருட்கள், அத்துடன் எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு பானங்கள், வடா பாவ், சமோசா, குளிர்பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை பள்ளிகளுக்குள்ளும், அவற்றைச் சுற்றியுள்ள 50 மீட்டர் பகுதிக்குள்ளும் விற்பனை செய்வதோ, இலவசமாக விநியோகிப்பதோ அல்லது
விளம்பரம் செய்வதோ கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் துகாராம் முண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் பள்ளி வாசலுக்கு வெளியே தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்பவர்களும் இப்போது இந்தத் தடையின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் சுமார் 1.08 லட்சம் பள்ளிகள் மற்றும் ஏறக்குறைய இரண்டு கோடி மாணவர்கள் மீது இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது ஒரு குறிப்பிட்ட வகை பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல; அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அல்லது உறைவிடப் பள்ளிகள் என மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். அதேபோல, அவை CBSE, ICSE அல்லது மாநிலப் பாடத்திட்டம் (State Board) என எந்த வாரியத்தின் கீழ் இயங்கும் மொத்தம் 1.08 லட்சம் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் ஹாஸ்டல்களில் இருக்கும் கேன்டீன், மதிய உணவு தயாரிக்கும் கிச்சன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் சமையல் கூடங்களில் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு தொடர்பான தகவல் பலகை, உணவு பாதுகாப்பு சூப்பர்வைசர், பாதுகாப்பான குடிநீர், தூய்மையான கிச்சன் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே உடல் பருமன் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன; நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக அதிகாரிகள் இதனை முன்னெடுத்துள்ளனர். பள்ளிகளைச் சுற்றி ஆரோக்கியமான உணவுச் சூழலை உருவாக்குவதும், மோசமான உணவுப் பழக்கங்களால் ஏற்படும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களின் சுமையைக் குறைப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று FDA தெரிவித்துள்ளது. இம்முயற்சி மாநிலத்தின் ‘பாதுகாப்பான உணவு, பாதுகாப்பான மகாராஷ்டிரா’ (Safe Food, Safe Maharashtra) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவுகளை மக்கள் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த உத்தரவை கடைப்பிடிப்படுவதை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் பள்ளி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள FDA திட்டமிட்டுள்ளதாகவும் முண்டே கூறினார்.