

இந்திய அளவில் திரைப்படங்கள் தான் பெரும்பாலான மக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது. அதிலும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாவாகவே கருதப்படும்.
இந்நிலையில் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள், தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பார்க்கிங் செய்வது உண்டு. இதற்காக தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த பார்க்கிங் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
தியேட்டர்கள் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு தியேட்டருக்கும் பார்க்கிங் கட்டணம் வேறுபடுகிறது. ஒரு சில தியேட்டருக்கு குறைந்தபட்சம் பார்க்கிங் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என சினிமா ரசிகர் ஒருவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களின் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது தியேட்டர்களின் கடமையாகும். ஆகையால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி இனி தெலுங்கானாவில் உள்ள சிங்கிள் தியேட்டர்களில் மட்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள கோனார்க் தியேட்டரில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் பிரேம் ராமாவத்திடம், வாகனத்தை பார்க்கிங் செய்யும்போது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது ரசிகர்களுக்கு சாதகமாக வந்துள்ளது.
பொதுவாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் அங்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களின் விலை அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் சார்பில் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதுதவிர பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் சிங்கிள் தியேட்டர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021-ல் தெலுங்கானா அரசு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இலவச பார்க்கிங் கட்டாயம் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தது. இருப்பினும் தனித் திரையரங்குகளில் மட்டும் பார்க்கிங் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் இந்தச் சலுகையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இனி சிங்கிள் ஸ்கிரீன் கொண்ட தியேட்டர்களிலும் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
தெலுங்கானாவை போல் தமிழ்நாட்டிலும் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.