

காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை முதல்வர் விஜய் அறிவித்த பிறகு, திமுகவிற்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முதல்வர் விஜய் திமுகவை பேச அனுமதிக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் சட்டமன்றத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளை வாசித்தனர்.
வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மானியக் கோரிக்கை விவாதத்தை தாக்கல் செய்தார்.
* சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்படக் கூடிய குறைகளை சரிசெய்ய புதிய இணையதளம் உருவாக்கப்படும்.
* சார்பதிவாளர் அலுவலகங்கள் சீரமைக்கப்படும்.
* நவீன உள்கட்டமைப்புடன் நவீன மாதிரி பதிவுத் துறை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* வாரிசு உரிமை சான்றிதழை நிகழ்நேரத்தில் சரிபார்த்து, போலி பத்திரப் பதிவுகள் தடுக்கப்படும்.
* 15.10.2026 முதல் இணைய வழியில் பத்திரப்பதிவு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும்.
* 2010 முதல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பயனாளிகளுக்கு நேரிடியாக அனுப்பி வைக்கப்படும்.
* சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது. இதற்கு முன்னதாக சனிக்கிழமைகளில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இனி இந்த அலுவலகங்கள் இயங்காது என அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரப் பதிவுகளை இணையதளத்தில் ஆன்லைன் வழியாக செய்யும் புதிய வசதிகள் தமிழ்நாட்டில் அறிமுகத்திற்கு வரவுள்ள நிலையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க இனி ஆன்லைன் வழியாகவே பத்திரப்பதிவு நடைமுறை கொண்டு வரப்படுவதால் தான், சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என அமைச்சர் அறிவித்துள்ளார்.