

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் சூழலில், 5 மணி நேரத்தை கடந்தும் நாங்குநேரி பகுதியில் உள்ள பெரும்பத்து என்ற கிராமத்தில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. இதன்மூலம் அக்கிராமத்தினர் ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்திற்கு, அரசு சார்பில் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் பெரும்பத்து என்ற கிராமத்திற்கு அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளி ஜான் (வயது 42) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரிநாத் கட்டா (வயது 50) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து பெரும்பத்து கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். பெரும்பத்து கிராமத்தில் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடி திறக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பகுதியில் பெரும்பத்து கிராமத்தினர், தமிழக சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 11:00 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.576% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது தற்போது வரை 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2021 தேர்தலை காட்டிலும் இது 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.