

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு பொறுப்பேற்று, மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கடந்த 2021-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட ‘அம்மா குடிநீர்’ திட்டம் பெயர் மாற்றப்பட்டு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை குறைந்த விலையில் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
அதாவது, அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ (Payani) குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். நீண்ட நேர பயணத்தின் போது பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பயணி குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பயணிகளின் வசதிக்காக ‘அம்மா குடிநீர்’ திட்டத்தின் கீழ் ரூ.10-க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் முக்கிய பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம் பின்னாளில் கும்மிடிப்பூண்டி அரசு குடிநீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் உற்பத்தி சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2021-ஆம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட தூர பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டம் தற்போது புதிய வடிவில் மீண்டும் அறிமுகப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீண்டதூரம் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘அம்மா குடிநீர்’ திட்டம் தான் தற்போது மறுவடிவம் பெற்று ‘பயணி’ என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
‘பயணி’ என்ற பெயரில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.10-க்கு நீண்ட தூரப் பேருந்துகளில் தற்போது வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் சென்னை மாநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதூர பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயணத்தின் போது குடிநீருக்காக அதிக தொகை செலவிட வேண்டிய நிலையை தவிர்த்து, பாதுகாப்பான குடிநீரை குறைந்த விலையில் பயணிகள் பெற்றுக்கொள்ள இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.