

தமிழ்நாட்டில் முதல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செய்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின் அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இதனால் தமிழ்நாட்டில் தற்போது ஐந்து சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான இடைத்தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அரசியலில் பயணிக்க போகிறார் என்ற தகவல் கடந்து சில நாட்களாக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகியது. இந்நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அரசியலில் பயணிப்பது தொடர்பான வீடியோவை அவர் நேற்று முன்தினம் (ஜூன் 10) வெளியிடுவதாக இருந்தது.
ஆனால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை வெளியிடும் தேதியை தள்ளி வைத்தார். இதன்படி அவர் இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவில், “கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். கஷ்டப்பட்டு உழைத்தும், உழைப்பிற்கான கூலி கிடைக்கவில்லையே என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இந்த வாசகத்தை எளிதில் புரியும் படி நான் ஒரு குட்டிக் கதையைச் சொல்கிறேன்.
எதிர்பார்ப்பு ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். இக்காணொளியைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கருத்துப் பகுதியில் பகிருங்கள். நீங்கள் "வேண்டாம்" என்று கூறினால், நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்;
மாறாக, சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவையைத் தொடர்ந்து மேற்கொள்வேன். ஆனால் நீங்கள் "ஆம்" என்று கூறினால், அரசியலில் ஈடுபட நான் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் இந்தப் பயணத்தை எப்போது, யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதை நான் அறிவிப்பேன்.
ஒரு பணக்கார வீட்டில் இரண்டு பேர் வேலை செய்தனர். அதில் ஒருவர் முதலாளியை புகழும் விதமாக இனிப்பான வார்த்தைகளை பேசிக் கொண்டே இருப்பார். மற்றொருவர் கொடுத்த வேலையை மட்டும் செய்து கொண்டிருப்பார். ஒரு நாள் அந்த முதலாளியை வெளியூருக்கு செல்லும்போது தன்னை புகழ்ந்து பேசி ஜால்ரா அடித்து அந்த நபருக்கு ஒரு மாத சம்பளத்தை கூடுதலாக கொடுத்தார். மற்றொரு தொழிலாளிக்கு ஒரு வீட்டை பரிசாக கொடுத்து நீ என்னுடனே வந்துவிடு என்று கூறினார். இதனை கேட்ட மற்றொரு நபர், சார் நான் தானே உங்களுக்கு எல்லாமே செய்தேன். அப்படி இருக்கையில் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு அந்த முதலாளி நீ எனக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு வேலையை ஒழுங்காக செய்யாமல் விட்டாய். ஆனால் அவன் கொடுத்த வேலையை மட்டுமே சிறப்பாக செய்தான். செய்யும் வேலைக்கு ஏற்பவே பலன் கிடைக்கும். அவன் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ததால் கடவுள் இன்று பலனை கொடுத்துள்ளார். இப்போது நம்ம கதைக்கு வருவோம். நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவேனா இல்லையா என்பது தானே உங்கள் கேள்வி. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நான் முதலில் அரசியலுக்கு வர வேண்டும். என் வாழ்க்கையில் முதலில் அரசியலுக்குள் நுழைந்தது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான். அப்போது இளைஞர்களுக்கு உணவளிக்கவும் ஆதரவாக இருக்கவுமே நான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தப் போராட்டத்தின் போது சீமான் அண்ணன் என்னை விமர்சிக்க, அது என்னை அரசியலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. அதன் பிறகு என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகின. நான் உடனே சென்று அவரைப் பார்த்தேன் அவரும் ஆமாம் என்றார். அவர் மூலமாக குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்ய நினைத்தேன்.
ஆனால் நினைத்தபடி என் தலைவர் அரசியலுக்கு வரவில்லை. இந்நிலையில் நான் அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை மக்கள் நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் ஆம் என்றால் நான் அரசியலில் இறங்கத் தயார். இல்லையென்றால் நான் தொடர்ந்து சமூக சேவையை செய்வேன்.
அரசியலுக்கு செல்ல என் தாய் அனுமதி கொடுத்து விட்டார். இனி என் ரசிகர்களாகிய நீங்கள் சொல்லுங்கள். இந்த வீடியோவை பார்ப்பவர்கள், உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.