தமிழ்நாட்டில் ஆரோக்கியமான உணவு வழங்கும் ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியீடு.
நெடுந்தூர ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உணவு. ஏனென்றால் தற்போது ரயில்களில் வழங்கப்படும் பெரும்பான்மையான உணவுகள் தரமற்றவையாக உள்ளன. அதிக லாபத்திற்காக மோசமான உணவு வகைகளை விற்பனை செய்கின்றனர் என்று ரயில் பயணிகள் பலரும் குற்றம் சாட்டியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் உணவுகளை பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் மாற்ற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களில் தரமான உணவு வழங்கும் ரயில் நிலையங்களுக்கு ஈட் ரைட் என்ற சான்று வழங்கப்படுகிறது.
ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டால்கள், கேட்டரிங்கள் என்று அனைத்து வகையான உணவு விற்பனை நிலையங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் உணவின் தரம், பாதுகாப்பு, ஆரோக்கியம், தூய்மை ஆகிய ஆராயப்படுகிறது. மேலும் உணவு உற்பத்தி முறை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் ரயில் நிலையத்தில் கிடைக்கும் தண்ணீரின் தரம், தூய்மை, சுகாதாரம், பூச்சி கட்டுப்பாடு, பராமரிப்பு என்று அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு ஈட் ரைட் என்ற தரச் சான்று வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட 6 ரயில் நிலையங்களுக்கு சிறந்த உணவு பொருட்களை மக்களுக்கு வினியோகம் செய்யும் ரயில் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ஈட் ரைட் என்ற தரச் சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சென்னை சென்ட்ரல், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம், மயிலாடுதுறை, திருச்சூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.