

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் மத்தியில், தனியார் பள்ளிகளின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளியையும், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்த முடியும் என சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் இந்த அரசுப் பள்ளியில் கிடைப்பதால், பெற்றோர்கள் பலரும் மாணவர்களை சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசுப் பள்ளியின் அதிநவீன தரத்தை முன்னிறுத்தி, இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ சான்று வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் என்றாலே தரமற்ற கட்டிடங்கள் மற்றும் சுகாதாரமற்ற இருப்பிடம் என்ற மனநிலை தான் பலருக்கும் உள்ளது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளியை முன்னேற்றுவதில் அதிக கவனமும், அக்கறையும் செலுத்தி வருகின்றனர். பல அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்களும் உதவி செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் இருக்கும் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழும்படி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் பள்ளி என்ற மகத்தான சாதனையைப் படைத்து, அனைவரது கவனத்தையும் தன்பக்கம் இழுத்துள்ளது ‘கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி’.
மாணவர்களின் பாதுகாப்பு, கற்பித்தல் தரம் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவற்றுக்காக ஐஎஸ்ஓ சான்று வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான டிஜிட்டல் நூலகம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதிகள் என பள்ளியின் அடிப்படை வசதிகள் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
ஒரு அரசுப் பள்ளியில் இத்தனை வசதிகள் இருக்குமா என பெற்றோர்கள் ஆச்சரியப்படும் வகையில், ‘கொண்டப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி நவீன தரத்துடன் திகழ்கிறது.
ஐஎஸ்ஓ சான்று கிடைத்தது குறித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், "தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகள் ஒன்றும் சளைத்தவை கிடையாது. தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் எங்கள் பள்ளியிலும் இருக்க வேண்டும் என்பதை நாங்ஙள் லட்சியமாக ஏற்றுக் கொண்டோம்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், டிஜிட்டல் நூலகம், ஸ்மார்ட் போர்டு, உயர்தரமான வகுப்பறைகள், தரமான இருக்கைகள் மற்றும் சுகாதாரமான கழிவறை என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.
பள்ளியின் தரம் மேம்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் ஐஎஸ்ஓ தரச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுரைத்தனர். இதன்படி பள்ளி சார்பாக விண்ணப்பித்ததும், மூன்று முறை ஐஎஸ்ஓ அதிகாரிகள் எங்கள் பள்ளியை வந்து ஆய்வு செய்த பிறகே, ஐஎஸ்ஓ தரச் சான்றை வழங்கினர்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கூட்டு முயற்சியே இந்த பள்ளியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்” என ஆசிரியர்கள் கூறினர்.
பல அரசுப் பள்ளிகளில் தங்கள் பள்ளியை எப்படியாவது தரம் உயர்த்த வேண்டுமென எண்ணற்ற ஆசிரியர்கள் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஊக்குமளிக்கும் வகையில், தற்போது சேலம் மாவட்டத்தின் கொண்டநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளி முன்மாதிரியாக விளங்குகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல அரசுப் பள்ளிகளின் தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.