

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆஜராகி இருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் மீண்டும் ஆஜராகி இருக்கிறார்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 1ஆம் தேதி) மீண்டும் வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. தினமும் இருவேளை செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு வந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வழக்கை அடுத்து இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார் செந்தில் பாலாஜி.
டாஸ்மாக் விவகாரம் மற்றும் முந்தைய வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாகக் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்து இட்டனர்.
குதிரை பேர வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஆஜராகவில்லை. தவெக ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு வெளியாகும் வரை நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த டாஸ்மாக் ஊழல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜி பெயரும் சேர்க்கப்பட்ட நிலையில், அவரின் வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்தி சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் அவசர வழக்காக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் நேற்று முன்தினம் முதல் செந்தில் பாலாஜி தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடாத நிலையில் டாஸ்மாக் ஊழல் வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.