

விண்ணுலகில் நடக்கும் அரிய நிகழ்வுகள் அனைத்தையும் காண மண்ணுலக மனிதர்கள் ஆவல் கொள்வதுண்டு. அவ்வகையில் இன்று விண்ணில் 2 முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. ஒன்று முழு சூரிய கிரகணம் என்றால், மற்றொன்று அரிய வகை விண்கல் மழைப் பொழிவு.
சூரிய கிரகணங்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால், இதுபற்றிய புரிதல் பலருக்கும் இருக்கும். இருப்பினும் சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே இருக்கும். ஆனால் விண்கல் மழை பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த விண்கல் மழை 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு. அப்படிப்பட்ட அதிசய நிகழ்வு இன்று நடக்கவுள்ளது.
ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 12) முழு சூரிய கிரகணம் இரவு 11:16 மணிக்கு நிகழவுள்ளது. இரவில் நிகழவுள்ளதால், சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க இயலாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விண்கல் மழை பற்றிய தகவலும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
‘ஸ்விப்ட் டட்டில்’ (Swift-Tuttle) எனும் பெயர் கொண்ட பெரிய வால் நட்சத்திரமானது, சூரியனை ஒருமுறை சுற்றி வர 133 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. ‘ஸ்விப்ட் டட்டில் வால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றி வரும் போது தனது சுற்றுப்பாதையில் பனி, தூசி, துகள்கள் மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்லும். இதன் வழியாக நாம் வாழுகின்ற பூமி கோள் கடந்து செல்லும் போது, அவை வளிமண்டலத்தில் நுழைந்து அதிவேகமாக எரிந்து மிளிர்கின்றன.
ஒவ்வொரு முறையும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி, ஆகஸ்ட் மாத இறுதி வரை இந்த நிகழ்வு இருக்கும். இருப்பினும் இந்த நிகழ்வின் உச்சக்கட்டம், ஆகஸ்ட் 11 - 13 ஆகிய 3 நாட்களில் வானத்தில் கண்கொள்ளா அழகிய காட்சியாக தென்படும்.
விண்கல் மழைப் பொழிவின் போது, ஒரு மணி நேரத்திற்கு எண்ணற்ற எரிகற்கள் தீப்பந்துகளைப் போல வெடித்துச் சிதறும். இதனை ‘பெர்செய்ட் (Perseid) விண்கல் மழை’ என்று அழைப்பர். இந்த வானியல் அழகை பூமியின் வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் இருந்து தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாக விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது காற்றுடன் வேகமாக உரசும். இதனால் சூடாகும் விண்கற்கள் நெருப்பு போல் ஒளிர்வதையே விண்கல் மழை என்கிறோம்.
பெர்செய்ட் (Perseid) விண்கல் மழையின் போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50 முதல் 100 விண்கற்கள் பூமியை நோக்கிப் பொழியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
‘ஸ்விப்ட் டட்டில்’ வால் நட்சத்திரம் இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்தது. மீண்டும் 2126 ஆம் ஆண்டில் தான் பூமிக்கு அருகே வரும். இருப்பினும் இந்த வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற துகள்கள் மற்றும் தூசிகளை பூமி ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதால், பெர்செய்ட் விண்கல் மழை நிகழ்வு ஆண்டுதோறும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தவறாமல் நிகழ்கிறது.
இந்த நிகழ்வைப் பார்க்க டெலஸ்கோப் அல்லது பைனாக்குலர் உள்ளிட்ட உபகரணங்கள் தேவையில்லை. வெறும் கண்களால் பார்த்தால், வானத்தில் விண்கற்கள் சீறிக் கொண்டு பாய்வதை முழுமையாக ரசிக்கலாம்.
இன்று ஒரே நாளில் சூரிய கிரகணம் மற்றும் விண்கல் மழை ஆகிய 2 வானியல் நிகழ்வுகள் நடக்கவுள்ளதால், இன்றைய தினம் வானியல் உலகில் சிறப்பான நாளாக இருக்கும்.