

மத்திய அரசு துறைகளில் உள்ள 2536 காலிப்பணியிடங்களுக்கு Staff Selection Commission அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது.
இந்தாண்டுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய நிலையில், 4 மாதங்கள் தாமதமாக தற்போது வெளியாகியுள்ளது.
அரசு வேலை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாகும். தோராயமாக 2,536 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேவையின் அடிப்படையில் இப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்புள்ளது.
அந்த வகையில், இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
முக்கிய விவரங்கள்:
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்:
பணிகள்: எல்.டி.சி (LDC), ஜே.எஸ்.ஏ (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO).
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
Data Entry Operator (DEO)
Data Entry Operator, Grade ‘A’
காலியிடங்களின் எண்ணிக்கை: 2536.
கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு பன்னிரெண்டாம் (12) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் சில பதவிகளுக்கு சில கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 07
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: அக்டோபர் 8
விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம்: 14.10.2026 முதல் 16.10.2026 வரை
விண்ணப்பக் கட்டணம்: இதற்கு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். இருப்பினும் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
வயது வரம்பு: 01.08.2026 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்சி/ எஸ்டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. கணவரை இழந்த பெண்கள், கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவகாரத்து பெற்ற பெண்கள் ஆகியவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்: கிளர்க் அல்லது இளநிலை செயலக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நிலை 2 கீழ் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
டேட்டா என்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு நிலை 4 கீழ் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரையும், நிலை 5 கீழ் ரூ. 29,200 முதல் ரூ. 92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு 2 கட்டமாக கணினி வழியில் தேர்வு நடைபெறும். கணினி வழியில் (Computer Based Examination) முதல்நிலை தேர்வு (Tier-I), முதன்மைத் தேர்வு (Tier-II) மற்றும் திறனறி தேர்வு (Skill Test/ Typing Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற எஸ்எஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு துறைகளின் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமாகவுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது ஏதேனும் சிக்கல் நேரிட்டால், 1800 309 3063 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது.