

நாட்டில் விவசாயிகள் தண்ணீருக்காக போராடி வரும் நிலைlயில், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கவும் மாநில அரசுகள் முழுமுயற்சி எடுத்து வருகின்றன. அவ்வகையில் தற்போது கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது உத்தரப்பிரதேச மாநில அரசு. இத்திட்டத்தின் படி ஒரு லிட்டர் கோமியம் மாநில அரசால் ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படும்.
விவசாயத்தில் மகசூலை அதிகரிப்பதற்காக செயற்கை உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இயற்கை விவசாயத்தை மீண்டும் கொண்டுவர இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்தது.
இதற்காகவே உத்தரப்பிரதேச அரசு தற்போது கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக இருப்பவை உரங்கள் தான். உரங்கல் மட்டும் இயற்கையானதாக அமைந்து விட்டால் இயற்கை விவசாயம் செழிப்பாகவும், அதிக மகசூலுடனும் மீட்டெடுக்க முடியும்.
தற்போது விவசாயிகள் பலரும் செயற்கை உரங்களை நாடிவரும் சூழலில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாட்டு மாடு வளர்ப்பு அவசியமாகும். மாடுகளின் மூலம் கிடைக்கும் கோமியம் மற்றும் சாணம் ஆகியவை இரண்டும், இயற்கை உரங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை சரியாக பயன்படுத்தினால், செயற்கை உரங்களை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. இருப்பினும் மாட்டுச் சாணத்தை பயன்படுத்தும் அளவிற்கு, கோமியத்தை விவசாயிகள் பலரும் பயன்படுத்த தவறி விடுகின்றனர்.
இயற்கை உரமான பஞ்சகாவ்யம் தயாரிப்பில் கோமியம் மிக முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில அரசு முதல்கட்டமாக கோமியம் கொள்முதல் திட்டத்தை 15 கிராமங்களில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் கோமியத்தை சேகரிக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு லிட்டர் கோமியத்திற்கு விவசாயிகளுக்கு 10 ரூபாய் வழங்கப்படும். கோமியத்தை சேகரிக்கும் பெண்களுக்கு கமிஷன் அடிப்படையில் லிட்டருக்கு 2 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, ஒரு லிட்டர் கோமியத்திற்கு 20 ரூபாய் வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கோமியத்தை கொள்முதல் செய்யும் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டிலும் அமலுக்கு வந்தால் தமிழக விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பசுவின் கோமியத்தை வீணாக்குவதற்கு பதிலாக, அதனை அரசிடம் கொடுத்தால் விவசாயிகளுக்கு மற்றுமொரு வருமான வாய்ப்பு கிடைக்கும். கால்நடை விவசாயிகளுக்கு பால் மட்டுமின்றி, இனி கோமியமும் வருமான ஆதரவாக மாறும்.
உத்தரப்பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கோமியத்தில் மூலிகைகளை சேர்க்கப்பட்டு, இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோமியம் மற்றும் சாணத்தைப் பயன்படுத்தி இயற்கை உரங்களை எப்படி தயாரிக்கலாம் என்ற வழிகாட்டுதல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வேளாண்மை வழிகாட்டுதல்களில், மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தைப் பயன்படுத்தி ‘ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம் மற்றும் பிரம்மாஸ்திரம்’ போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் விவசாயிகளின் சொந்தப் பயன்பாட்டிற்காகவே மட்டுமே; தமிழக அரசு கொள்முதல் செய்வதற்காக அல்ல.