

தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டின் கள நிலவரம் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தேர்தலுக்குப் பின் வெளியான கருத்துக் கணிப்புகள் இதனை தெளிவாக கூறியுள்ளன.
பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒரே கட்சிக்கே சாதகமாக அமைந்தன. ஆனால் காமாக்யா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு மட்டும் சற்று வித்தியாசமானதாக இருந்தது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் கட்சி அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே நாளை (மே 4) வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மேலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் இம்முறை அதிக வாக்குப்பதிவும் நிகழ்ந்துள்ளது.
கடந்த அரை நூற்றாண்டாக திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி நிலவும். ஆனால் இம்முறை விஜய்யின் தவெக-வுக்கும் அதிக வரவேற்பு கிடைத்திருப்பதால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதற்கேற்பவே காமாக்யா நிறுவனத்தின் கருத்துக் கணிப்பும் உள்ளது.
காமாக்யா கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 33% முதல் 35% வரையிலான வாக்குகளைப் பெற்று, 78 முதல் 95 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 29% முதல் 33% வரையிலான வாக்குகளைப் பெற்று, 68 முதல் 84 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும்.
தவெக 25% முதல் 31% வரையிலான வாக்குகளைப் பெற்று, 67 முதல் 81 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும்.
நாம் தமிழர் கட்சி 4% முதல் 6% வரையிலான வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவை. ஒருவேளை காமக்யா நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின் படி எந்தக் கட்சியும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றவில்லை எனில், தேர்தல் முடிவுகளுக்குப் பின் கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணி அமைக்க தவெக ஒப்புக்கொள்ளவில்லை எனில், வெளியில் இருந்து அதிமுகவிற்கு மைனாரிட்டி ஆதரவு அளிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் சில நாட்கள் அவகாசம் வழங்குவார். அதற்குள் எந்தக் கட்சியும் போதுமான எம்எல்ஏ-க்களுடன் ஆட்சி அமைக்க வரவில்லை எனில், தொங்கு சட்டசபை ஏற்படும். பிறகு தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் மறு தேர்தல் நடத்தப்படும்.
இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்தபோது, அவரது மனைவி ஜானகி முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற சில தினங்களிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கோரிக்கை வைத்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகிக்கு போதுமான ஆதரவு கிடைக்காத நிலையில், ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஒரு ஆண்டு காலம் நீடித்த குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இம்முறை மீண்டும் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்றே தமிழக கள நிலவரங்கள் கூறுகின்றன. இது நடந்தால் தமிழ்நாட்டில் மறு தேர்தல் நிச்சயமாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.