

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டசபை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கிய நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 10-ம்தேதி) தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
அதேபோல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் தர வேண்டும்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டசபையில் அரசு தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதனை முதலமைச்சர் விஜய் இன்று முன்மொழிகிறார்.
முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரை மாநிலத்தின் பாடல் முதலில் பாடாமல் 3-வதாக பாடப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய சூழலில், இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வரும் இந்தத் தனித்தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' பாடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனையொட்டி சமீபத்தில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் கூடியது.
அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-
தமிழ் மொழியின் ஒரு அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடத்தில் தான் இருக்க வேண்டும். தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. நம் உயிர், உணர்வு, தாயை போன்று தாய்மொழியான தமிழும் புனிதம். தமிழ் என்று சொன்னாலே நம் மொழியின் உணர்வு புரியும்.
தமிழ் மொழி பேசாத மக்கள் இல்லாத நாடே இல்லை. தமிழ் என்பது ஒரு பண்பாடு, ஒரு நாகரீகம், தமிழ் என்றாலே கெத்து, தமிழ் என்றாலே பவர். தமிழ் என்பது தமிழர்களான நம் அனைவரின் பொதுப்பெயர்.
தமிழை பின்னாடி தள்ளினால் தமிழ்நாடு சும்மா இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.
தமிழ் மொழியின் ஒரு அடையாளம் தான் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தான் முதலில் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் என்பது தான் மாநில உரிமை. எனவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது நம் மரபு.
தமிழ் என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்றாக நிற்கும். இந்தியாவின் நெற்றியில் உள்ள வெற்றிப்பொட்டு தான் தமிழ். மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாநில பாடல் தொடர்பான விவரம் இல்லை. மாநில விழாக்களில் மாநில பாடலுக்கு முன்னுரிமை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய திமுக, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் என்ற அரசினர் தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவளித்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி; தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17ல் அரசாணை வெளியிட்டது முக ஸ்டாலின் என்று கோவி. செழியன் கூறினார்.
அதையடுத்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழன்னைக்கான மரியாதை என்றார். தமிழ் என்று வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது தமிழுக்கான மரியாதை; தேசப்பற்றும் மொழிப்பற்றும் பரஸ்வரம் வேறு வேறு அல்ல என்று கூறினார்.
அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழுக்காக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானம் எட்டரை கோடி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார் முதலமைச்சர் விஜய் என்று விசிக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் என்ற அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் ஏக மனதாக ஆதரவு அளித்தது.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை/தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.