

திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கவும், கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று (22-ந்தேதி) திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதுமட்டுமின்றி நிர்வாக ரீதியாகப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சவும், எதிர்க்கட்சியாகத் தனது ஆளுமையை நிரூபிக்கவும் தலைவர் முக ஸ்டாலின் இந்த கூட்டத்தின் மூலம் அதிரடி முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டதால், இன்று நடைபெற உள்ள செயற்குழு கூட்டம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக படுதோல்வியை சந்தித்தது. கட்சியின் தலைவரே தனது சொந்த தொகுதியில் படுதோல்வி அடைந்ததால், முக ஸ்டாலின் சட்டசபைக்கு செல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தவெக ஆட்சி அமைந்ததும் ஊழல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுப்புறம் திமுக மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் மக்களை கடுமையாக விமர்சித்து வருவதால் திமுக பின்னடைவை சந்தித்து வருகிறது.
தவெகவுக்கு எதிராக திமுகவை கட்டமைக்கும் முயற்சியில் அறிவாலயம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படியான சூழ்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கழகத் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, தயாநிதி மாறன், ஆர் எஸ் பாரதி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திமுக தொடங்கி 75 ஆண்டுகள் கடந்த பிறகும் வலிமையோடு இருக்க காரணம் அமைப்புமுறை தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.
பொதுக்குழுவில் பேசிய முக ஸ்டாலின், படைக்கு இளையோர் வரும்போது அவர்களை மூத்தோர் வரவேற்று வழிநடத்த வேண்டும் என்றார். இனமும் மொழியும் இருக்கும் வரை கறுப்பு சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து, திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கவும், கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு, திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் 110 மாவட்ட செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும், திமுகவில் கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளருக்கு வயது 70, ஒருவர் இரு முறை மட்டுமே செயலர் முதல் மாவட்ட செயலர் வரை அதே பதவியில் இருக்க முடியும்.
மேலும் திமுகவில் கிளை செயலாளர் முதல் தலைவர் வரை உட்கட்சி தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திமுவில் உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு உட்கட்சி தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.
கொள்ளை கோட்பாட்டில் உறுதியாக உள்ள திமுக நிர்வாகிகள் தொண்டர்களை அரவணைப்பதில் சறுக்கி விடுவதாக முக ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநகராட்சியில் 40,000 பிற மாநகராட்சியில் 30,000 வாக்காளர்களுக்கு ஒரு பகுதி கழகம் அமைப்பு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளை செயலாளருக்கு 45 வயது, வட்ட செயலாளருக்கு 50 வயது என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 10,000 வாக்காளர்களுக்கு பிற மாநகராட்சிகளில் 5000 வாக்காளர்களுக்கு ஒரு வட்ட கழகம் அமைப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவில் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இனி மாவட்ட செயலாளர்களாக இருக்க முடியும். திமுக கிளைக்கழ செயலாளருக்கான அதிகபட்ச வயது 45, ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 வயது கடந்தவர்களை மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து விடுவிக்கவும் திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது.
அதன்படி உச்ச வரம்பு 70 வயது என்ற தீர்மானத்தால், தற்போதைய 13 மாவட்ட செயலர்கள் பொறுப்பில் இருந்து விடுவிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
செஞ்சி மஸ்தான், எஸ் ஆர் சிவலிங்கம், முத்துசாமி, ஆர் காந்தி, சுந்தர், சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, தளபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன் ஆகியோர் 72 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இவர்கள் பதவி விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.