

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மின் நுகர்வோர்களுக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்துவருகின்றன. திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவாக இருந்ததாகவும், தவெக ஆட்சியில் அதே மின் கட்டணம் இரு மடங்கு அதிகரித்ததாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த முறை கட்டியதைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக நுகர்வோர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு நடத்தப்படும என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதும், கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் முதன்மையானதாகவும், மக்களை கவரும் வகையிலும் அமைந்தது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனும் திட்டம்.
அதனை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் என அறிவித்தார். அதேசமயம் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது.
மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது; அத்துடன், பழையபடி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பலரும் தங்களுக்கு மின் கட்டணம் கடுமையாக உயர்ந்திருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூடுதல் கட்டணத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்துவிட்டு, மின் கட்டணத்தை அரசு அமைதியாக உயர்த்திவிட்டதாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும், திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் மற்றும் சில அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளார்.
2025 மற்றும் 2026 மின் கட்டணம் வேறுபாடு
இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை.
101 முதல் 200-க்கு ரூ.2.35 விதம் ரூ.235 செலுத்த வேண்டும். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) ரூ.4.70 வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் ரூ.239.70 செலுத்த வேண்டும்.
2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு ரூ.4.70 விதம்) ரூ.4.70 செலுத்த வேண்டும்.
2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் ரூ.705 செலுத்த வேண்டும். தற்போது ரூ.470 செலுத்த வேண்டும்.
2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1175 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது ரூ.940 செலுத்த வேண்டும்.
2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1805 செலுத்த வேண்டும். தற்போது ரூ.1507 செலுத்த வேண்டும்.
2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் ரூ.2880 செலுத்த வேண்டும். தற்போதும் ரூ.2880 செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.
பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மின் கட்டணம் அதிகரித்திருப்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை. இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால் பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.
மேலும், ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.