

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.
காங்கிரஸ் தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்தை சுட்டிக்காட்டி, திமுக-விடம் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக பிடிவாதமாக இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் தவெக கூட்டணியில் இணைவது தான் நல்லது என்றும், திமுக கூட்டணியிலேயே தொடரலாம் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாத நிலையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அப்படி ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால், திமுகவில் தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக இணைய அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரிடம் பொறுமையாக காத்திருங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது சந்தேகம் தான் என்றாலும், இத்தகைய பேச்சுகள் தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது அரசியல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் பட்சத்தில், காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரே மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் காங்கிரஸின் முடிவை எதிர்நோக்கி தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில் இம்முறை காங்கிரஸ் தனது இருப்பிடத்தை பலமாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது.
இதற்காகவே ஆட்சியில் பங்கு என்ற தவெக-வின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் இது சாத்தியமாகுமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காங்கிரசின் முடிவைப் பொருத்தே மற்ற கட்சிகளின் முடிவும் இருக்கும் என்பதால், 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தவெக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள், தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை அளிக்கலாம் என தெரிவித்துள்ளன. தேமுதிக-வில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும், தவெக-வில் பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும் விருப்பம் மனுவை அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.