

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது தவெக அரசு.
இதன்படி நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலைத் தொடங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் மதியம் 12:31 மணிக்கு முடித்தார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் வராதது, இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்களுக்கு உதவும் வகையில் பல சிறப்புத் திட்டங்கள் பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டன.
அதோடு கூவம் மற்றும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்த தவெக அரசு முயற்சி மேற்கொள்ளும் என நிதியமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
1 ரூபாய் வரவுக் கணக்கு:
* மாநிலத்தின் சொந்த வரி வருவாய் - 43.3%
* பொது கடன் - 33.1%
* மத்திய வரி பங்கு - 11.9%
* மத்திய அரசு மானியங்கள் - 6.3%
* சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%
* கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு - 0.1%
1 ரூபாய் செலவுக் கணக்கு:
* உதவித் தொகைகளும், மானியங்களும் - 33.3%
* சம்பளங்கள் - 17.3%
* வட்டி செலுத்துதல் - 15%
* மூலதன செலவு - 10.9%
*கடன்களை திருப்பி செலுத்துதல் - 9.9%
* ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பயன்கள் - 8%
* செயல்பாடுகளும், பராமரிப்புகளும் - 3.8%
* கடன் வழங்குதல் - 1.9%
இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27 இல் ரூ.48,696 கோடியாக மதிப்பிடப்பட்டது. வருவாய் வரவுகளை மிகையாக மதிப்பிட்டது மற்றும் வருவாய் செலவினத்தை குறைவாக மதிப்பிட்டது ஆகியவற்றின் மூலம் வரவு - செலவு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 இல் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல ஆண்டு கனவாக இருந்த நதிகள் இணைப்புத் திட்டம் இன்று வரை முழுமை பெறவில்லை. இந்நிலையில் நதிகளை மறுசீரமைக்க ரூபாய் 25 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இந்த திட்டத்தின் கீழ் தாமிரபரணி, வைகை மற்றும் காவிரி நதிகள் மறு சீரமைக்கப்பட உள்ளன. நதிகளில் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாடு மற்றும் நதி மேற்பரப்பு சுத்தம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள், தங்களது விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் தவெக அரசின் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்ததோடு, இந்த பட்ஜெட்டிற்கு 0 மதிப்பெண் தான் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.