
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய, புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை ரேஷன் அட்டை அடிப்படையில் தேர்ந்தெடுத்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை கலைஞர் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த 1000 ரூபாய் உரிமை தொகையானது நேரடியாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வுக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 14-ம்தேதி முதல் நடந்து வருகிறது. இதில் இன்று சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி உரையாற்றினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்துள்ளனர். இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்காக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளனர்.
இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்காக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மகளிர் பலன் அடையும் வகையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில விதிகளை அரசு தளர்த்தியுள்ளது. தளர்த்தப்பட்ட விதிகளின்படி, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி இதுவரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்துள்ள நிலையில் இந்த முகாம்கள் வரும் நவம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைய உள்ளன.
புதிதாக உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் படிப்படியாக அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.