

அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதை எதிர்த்து அமெரிக்கா தனது முதல் தாக்குதலை ஈரான் மீது தொடுத்தது. அமெரிக்காவுக்கு உறுதுணையாக இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளின் தாக்குதலையும் ஈரான் எதிர்த்து நின்றது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயேதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஹார்மூஸ் ஜலசந்தியையும் மூடியது.
ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக உலக நாடுகளில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவியது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு, விலையும் உயர்ந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அமைதி உடன்படிக்கையின் படி போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்து, ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது.
இருப்பினும் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க முக்கிய முடிவை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உலக எண்ணெய் விநியோகத்தில் இதயமாக செயல்பட்டு வரும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறப்பது அவசியம். இதற்காக அணு ஆயுத தயாரிப்பை எதிர்க்கும் தங்களது முடிவில் இருந்து அமெரிக்கா பின்வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ஊள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை இனி எதிர்க்க மாட்டார் எனத் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஹார்மூஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கவும் அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்த ஆய்வில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றாலும், ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டியது அவசியம். இதற்காகவே போரை முடிவுக்கு கொண்டு வர தனது நெருங்கிய ஆலேசகர்களுடன் டிரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்மூஸை திறக்க வேண்டுமெனில், சில குறிப்பிட்ட நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளது ஈரான். இதன்படி ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும்; முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்; ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஈரானின் இந்த கோரிக்கைகளுக்கும் அமெரிக்கா சம்மதித்தால் மட்டுமே ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும். அணு ஆயுத தயாரிப்பையே எதிர்க்க வேண்டாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், ஈரானின் மற்ற கோரிக்கைகளலயும் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த மாத இறுதிக்குள் போர் முடிவுக்கு வந்து ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்படுவது உறுதியாகி விடும். அதன்பின்னர் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
பல மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் போரின் முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு டிரம்பின் இந்த முடிவு ஆறுதலை அளித்திருக்கும்.