

கடந்த சில நாட்களாகவே சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களால் இந்தியாவிலும் வர்த்தக ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பிப்ரவரி 28-ம்தேதி இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால், கடந்த 6 நாள்களாகவே மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்த போர் பதற்றம், இந்தியாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக மாறி இருப்பதுடன், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடும் பாதிப்படைந்துள்ளது.
ஏனென்றால் இந்தியாவின் ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள், எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த போர் பதற்றத்தால் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை இன்னும் 2 மாதங்கள் நீடித்தால் ரூ.1000 கோடி வரை ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகும் நிலையில் இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கிடையே, சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட நாடுகளின் பாஸ்மதி அரசி தேவையை இந்தியாதான் 50 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போரால் பாஸ்மதி அரசியை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 4 லட்சம் டன் அரிசி இந்தியாவில் தேங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரே பேரல் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு விற்பனையாகி வந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு பின் சுமார் 10 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலைமை இன்னும் தொடர்ந்து மோசமானால், இது 100 அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல்-டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் என கணிக்கப்பட்டது.
உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். கச்சா எண்ணெயில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு 88 சதவீத இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் இருப்பு உள்ளதாகவும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டாலும் தற்சமயத்திற்கு, பெட்ரோல்-டீசல் விலை உயராது என மத்திய அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும் தற்போதுள்ள நிலையில் இந்த இருப்பு எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போர் நெருக்கடியால் இந்தியாவில் ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதுடன் இதன் நேரடி தாக்கம் நமது அன்றாட சமையல் பட்ஜெட்டிலும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.
அதாவது, சமையல் எண்ணெய்களின் விலை கடந்த சில நாட்களில் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. உலகளாவிய பதற்றங்களின் விளைவாக, சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், பாமாயில் மற்றும் கலப்பு எண்ணெய்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக ஏழை மற்றும் மிடில் கிளாஸ் குடும்பங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாமாயில் விலை கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு, பெங்களூருவின் சில்லறை சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.161க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.165ஐ எட்டியுள்ளது. போர் இன்னும் நீடிக்கும் நிலையில் வரும் நாட்களில் சூரியகாந்தி மற்றும் கலப்பு எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் போருக்கு மத்தியில் இந்தியாவில், சமையல் சிலிண்டர் விலை உயரும் என்று அஞ்சப்பட்ட நிலையில், அது நடக்காது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது, எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தையில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி வீட்டு நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும், நாட்டில் உள்ள வீடுகளுக்கு போதுமான எல்பிஜி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் உடனான போர் இன்னும் சிலநாட்கள் நீடிக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுவதுடன், நமது அன்றாட சமையல் பட்ஜெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.