

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை இருவரும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜரான நிலையில், இந்த முறை இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் திரை உலகில் தளபதியாக வலம் வந்து பின்னாளில் அரசியல் ஆர்வத்தால் தவெக கட்சியை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் விஜய்.
விஜய்க்கும் அவரது ரசிகையாக இருந்த சங்கீதாவுக்கும் கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம்தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. லண்டனில் வசித்து வந்த தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சய் தற்போது சிக்மா படத்தை இயக்கி இருக்கிறார்.
விஜய் - சங்கீதா தம்பதியிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், விரைவில் அவர்கள் பிரியக்கூடும் என்றும் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கேற்றார் போல் விஜய்யின் திரைப்பட நிகழ்வுகளிலும் அரசியல் நிகழ்வுகளிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.
இந்தச் சூழலில்தான், விஜய் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவரிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்தார்.
செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தனக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று கோரி இருந்தார்.
விஜய் தமக்குத் தெரிந்த மற்றொரு பெண் நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சங்கீதா மனுவில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே விஜய் தன்னை குடும்ப வாழ்க்கையில் இருந்தும், சமூக மற்றும் தொழில்முறை நிகழ்வுகளில் இருந்தும் முற்றிலும் ஒதுக்கி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர் புறக்கணிப்புகள் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலையும், சமூகத்தில் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இந்த விவாகரத்து வழக்கின் பின்னணியில் நீலாங்கரையில் உள்ள குடியிருப்பு வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமை மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் சார்ந்த கோரிக்கைகளைச் சங்கீதா தரப்பு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுமூகமான தீர்வு காண்பது குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்சூழ்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, காணொலி காட்சி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் 15-ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இருவரையும் சமரச மையத்திற்கு தான் அனுப்ப வேண்டும் என கூறி வழக்கு ஆகஸ்ட் 7-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணைக்கு வர உள்ளது. இதுவரை மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சங்கீதா - விஜய் தரப்பு நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், சட்டசபைக் கூட்டம் நடைபெறுவதால் விஜய் நேரில் ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சங்கீதா கோர்ட்டில் ஆஜாராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், ஒருபுறம் விஜய் - திரிஷா விவகாரம் குறித்து உதயநிதி பேசியது இன்னும் பேசுபொருளாகவே உள்ள நிலையில், மறுபுறம் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த வழக்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.