

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மறுபுறம் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழகம் முழுவதும் செய்து வருகிறது.
பொதுமக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுச் செய்திகளைத் தாங்கிய பிரம்மாண்ட பலூன்கள், ரிப்பன் கட்டிடம், எழிலகம், அண்ணா சாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன; இவை, வாக்காளர்களை ‘தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் மாபெரும் கொண்டாட்டம்’ எனும் நிகழ்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு, மாவட்டம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வுச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் ஒரு சிறப்பம்சமாக, சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி பேருந்து, மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது.
2026-ம் ஆண்டு முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் தயக்கத்தைப் போக்கவும், வாக்களிக்கும் முறையை அவர்களுக்கு முறையாக கற்றுத் தரவும் இந்தப் பேருந்து ஒரு 'நடமாடும் வாக்குச்சாவடி' போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தப் பேருந்துக்குள் நுழைந்த ஒரு வாக்காளர், ஒரு நிஜமான வாக்குச்சாவடிக்குள் நுழைந்த உணர்வை அனுபவிக்கும் வகையில் அதன் உட்புறக் கட்டமைப்பு மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்தின் மிக முக்கியமான அம்சம், தேர்தல் நாளன்று முதல் முறையாக வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக ஒரு வாக்குச்சாவடியில் அலுவலர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது பேருந்தின் உள்ளே நிஜமான வாக்குச்சாவடியைப் போன்றே அலுவலர்கள் அமரும் இடம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாக்காளர் உள்ளே நுழைந்தது முதல் வெளியேறும் வரை எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த 'நடமாடும் வாக்குச்சாவடி' மூலம் எளிய முறையில் புரிய கொள்ளமுடியும்.
மெரினா கடற்கரைக்கு மாலை நேரங்களில் வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும்மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தப் பேருந்து ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
தேர்தல் குறித்த அச்சம் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பேருந்திற்குள் சென்று செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.