

ரெயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் (PRS counters) எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரெயில்வே புதிய வழிமுறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரெயில்வே (Indian Railways). இது நாட்டின் தரைவழிப் போக்குவரத்தின் மிக முக்கிய முதுகெலும்பாக விளங்குகிறது. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள், கல்வி, வேலை, வெளியூர் பயணங்களுக்கான ரெயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ரெயில் பயணம் வசதியானது, டிக்கெட் கட்டணம் மற்ற போக்குவரத்து கட்டணத்தை விட மிகவும் குறைவு என்பதாலும் அதிகளவிலான மக்கள் ரெயிலில் பயணம் செய்வதைவே விரும்புகின்றனர். ரெயில்வே துறையும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளையும், வசதிகளை அறிமுகப்படுத்தி அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் ரெயில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தட்கல் டிக்கெட்டுகள் எடுக்கும் முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரெயில்வே டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முறைகேடாக டிக்கெட் வாங்கும் இடைத்தரகர்களைத் தடுக்கவும் புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு தொடங்கும் முன்பே பயணிகள் தங்கள் வரிசையை உறுதிசெய்யும் வகையில், தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் முன்னதாகவே வழங்கப்பட உள்ளது.
வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே பயணிகள் பெருமளவில் வரிசையில் நிற்கின்றனர்.
சில இடங்களில், பயணிகள் டோக்கனுக்காக ஒரு முறையும், பயணச்சீட்டுக்காக மீண்டும் மற்றொரு முறையும் மையத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தான், மேற்கு மத்திய ரெயில்வே ஒரு புதிய டோக்கன் கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
பின்னர், பயணிகள் அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும். இதன் மூலம், பயணிகள் தங்களது டோக்கனை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் கவுண்டருக்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இது கவுண்டர்களில் ஏற்படும் தேவையற்ற கூட்டத்தைக் குறைத்து, முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இம்முறை நடைமுறைக்கு வரும்பட்சத்தில், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இதன் மூலம் முன்பதிவு செயல்முறை ஒரே முறையில் முடித்துவிடும் என்பதால், பயணிகளின் நேரத்தைச் சேமிப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் அறிமுகமாகவிருக்கும் புதிய டோக்கன் முறையின் மூலம் இனிமேல் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளுக்காக முன்பதிவு மையத்திற்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
ஒவ்வொரு முன்பதிவு மையத்திற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையையும் ரெயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி AC தட்கல் முன்பதிவுகளுக்கு ஆரம்பத்தில் 10 டோக்கன்கள், AC அல்லாத (ஸ்லீப்பர்) தட்கல் முன்பதிவுகளுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்படும். ஏசி தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத (ஸ்லீப்பர்) தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறை வருகிற 1-ந்தேதி (ஆகஸ்ட்) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் இந்த டோக்கன் முறை வெற்றிகரமாக செயல்படுவதை பொறுத்து, படிப்படியாக நாடு முழுவதும் உள்ள பிற 18 ரெயில்வே மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.