

கைரேகையை பெரும்பாலும் செல்போனை அன்லாக் செய்வதற்கும், அலுவலகத்தில் அட்டெண்டன்ஸ் போடுவதற்கும், அல்லது ஆதார் கார்டு எடுக்கவும்தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம். ஆனால், இயற்கையாகவே மனிதர்களுக்கு இந்த விரல் ரேகை எதற்கு உருவானது என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா.
பல லட்சம் வருடங்களாகப் பரிணாம வளர்ச்சியில் நமது முன்னோர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த இந்த சின்ன ரேகைகளுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அறிவியல் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்ட வரலாறு மறைந்திருக்கிறது. இது வெறும் அடையாளம் காண்பதற்கான ஒரு டூல் கிடையாது. அதைவிட முக்கியமான பல ரகசியங்களை இது தன்னுள் அடக்கியுள்ளது.
கைரேகைகளின் கிரிப்!
நமது கைகளில் இந்த மேடுபள்ளமான ரேகைகள் இருப்பதற்கான மிக முக்கிய காரணம் 'கிரிப்' என்று சொல்லக்கூடிய பிடிமானம்தான். நீங்கள் ஒரு வழுவழுப்பான கிளாஸை பிடிக்கும்போதோ அல்லது மரத்தில் ஏறும்போதோ உங்கள் கை சறுக்காமல் இருப்பதற்கு இந்த ரேகைகள்தான் பெரும் உதவி செய்கின்றன. கைகளில் லேசாக வியர்க்கும் போது அந்த ஈரம் நமது கைகளை மிருதுவாக்கி ஒரு சூப்பரான பிடிமானத்தைக் கொடுக்கிறது.
அதே சமயம், ரொம்ப அதிகமாக தண்ணீர் கைகளில் பட்டால், இந்த ரேகைகளுக்கு இடையே உள்ள பள்ளங்கள் அந்தத் தண்ணீரை அப்படியே வெளியேற்றி கை வழுக்காமல் பார்த்துக் கொள்கின்றன. குரங்குகளில் இருந்து நாம் வந்தோம் எனச் சொல்வார்கள் அல்லவா, அப்போது மரங்களில் தாவுவதற்கும் உணவைப் பிடித்துச் சாப்பிடுவதற்கும் இந்த ரேகைகள்தான் அவர்களுக்கு ஒரு மாபெரும் ஆயுதமாக இருந்துள்ளது.
தொடு உணர்வு!
ஒரு பொருளை நாம் தொடும்போது, அந்தப் பொருளின் சொரசொரப்பு அல்லது மென்மையை நமது மூளைக்கு மிகத் துல்லியமாகக் கடத்துவது இந்த ரேகைகள்தான். ரேகைகளில் உள்ள மேடுகள் ஒரு பொருளின் அதிர்வுகளை நமது தோலுக்கு அடியில் உள்ள நரம்புகளுக்கு நேரடியாகக் கடத்துகின்றன.
இதனால்தான் நம்மால் ஒரு சின்ன ஊசியைக் கூட மிகக் கவனமாகக் கையாள முடிகிறது அல்லது கண்ணை மூடிக்கொண்டே ஒரு பொருளைத் தொட்டு அது என்னவென்று சரியாகச் சொல்ல முடிகிறது. இதே போன்ற ரேகைகள் நமது உள்ளங்கால்களிலும் இருப்பதால்தான் நம்மால் தரையில் வழுக்கி விழாமல் பேலன்ஸ் செய்து நடக்க முடிகிறது.
தனித்துவம்!
இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த ரேகைகள் நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே பத்தாவது வாரத்திலேயே உருவாக ஆரம்பித்துவிடுகின்றன. மரபணுக்களைத் தாண்டி, வயிற்றில் உள்ள நீர், ரத்த ஓட்டம் மற்றும் தோல் வளரும் விதம் என பல விஷயங்கள் இணைந்துதான் இந்த ரேகையைச் செதுக்குகின்றன.
இதனால்தான் இந்த உலகத்தில் எந்த இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ரேகை இருப்பதில்லை. ஏன், ஒரே கருவில் உருவான இரட்டையர்களுக்குக் கூட கைரேகைகள் அச்சு அசலாக ஒன்றாக இருக்காது என்பது ஒரு ஆச்சரியமான உண்மையாகும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் மரங்களில் பாதுகாப்பாக ஏறுவதற்கும், வேட்டையாடுவதற்கும் உருவான இந்த ஒரு சின்ன விஷயம்தான், இன்று மாடர்ன் உலகில் மிகப்பெரிய செக்யூரிட்டி சிஸ்டமாக மாறி நிற்கிறது. போலிஸ் இன்வெஸ்டிகேஷன் ஆகட்டும் அல்லது சர்வதேச விமான நிலையங்களில் நடக்கும் செக்கிங் ஆகட்டும், எல்லாவற்றுக்கும் நமது கைரேகைதான் முக்கிய சாட்சியாக இருக்கிறது.