
சந்திரனில் இனி வசிக்கலாம், பயமில்லை! ஆக்ஸிஜனும் கிடைக்கும், தண்ணீரும் கிடைக்கும். சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணிலிருந்து ஆக்ஸிஜனும் மீதேன் வாயுவும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது! சீன விஞ்ஞானிகளே இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.
ஹாங்காங் பல்கலைக் கழகத்தில் கெமிஸ்டாகப் பணியாற்றும் லூ வாங் (LU WANG, CHEMIST, UNIVERSITY OF HONG KONG) என்பவர், ” நீரும் போட்டோதெர்மல் கார்பன் டை ஆக்ஸைடும் கிடைத்திருப்பதானது ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும். அங்கு குடியிருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பெரும் செலவை வெகுவாகக் குறைக்கும்.” என்று கூறியதோடு ‘இது பெரும் ஆச்சரியத்தைத் தரும் கண்டுபிடிப்பு’ என்று கூறி மகிழ்கிறார்.
பூமியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து சந்திரனுக்குச் சென்று அங்கு உயிர் வாழ்வது என்றால் எத்தனை கோடானகோடி பணம் செலவாகும்?
நல்லவேளையாக சந்திரனில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது. அதைக் குடிப்பதற்காகப் பிரித்தெடுப்பது மிகவும் சுலபமான வேலை தான். ஆனால், இப்போது ஆச்சரியம் என்னவென்றால் சந்திரனில் உள்ள மண்ணை ஒரு கிரியா ஊக்கியாகப் பயன்படுத்த முடியும் என்பது தான்.
கார்பன் டை ஆக்ஸைடு துகள்களை எடுத்து அதை நீரோடு கலந்து மீதேன் வாயுவை உருவாக்கலாம்! லிக்விட் ஹைட்ரஜனை விட மீதேன் வாயு ராக்கட்டிற்கு எரிபொருளாக உதவுவதோடு செலவையும் வெகுவாகக் குறைக்கும். சீனாவில் உள்ள பல நிறுவனங்கள் மீதேனால் இயங்கும் ராக்கெட்டுகளைச் செலுத்த இப்போதே தயார்!
இதற்கான தொழில்நுட்ப செயல்முறையை மிக நுட்பமாக அவர்கள் விளக்குகின்றனர். ஆனால், தேவையான அளவு கார்பன் டை ஆக்ஸைடை விண்வெளிவீரர்களால் மூச்சு விடுவதன் மூலமாகத் தர முடியுமா? என்பது தான் கேள்வியாக இருக்கிறது. என்றாலும் சீன விஞ்ஞானிகள் சந்திர மண் அடுக்குகள் மூலம் எரிபொருளையும், தண்ணீரையும் உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சீனாவின் அபரிமிதமான நம்பிக்கை இப்படி இருக்க அமெரிக்காவோ இது பற்றி இன்னும் கொஞ்சம் சந்தேகத்தைக் கொண்டுள்ளது! அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் உள்ள கோள் இயற்பியல் விஞ்ஞானியான பிலிப் மெட்ஸ்ஜெர் ( Philip Metzger, a planetary physicist from the University of Central Florida)” இதெல்லாம் சரிதான்!
ஆனால், இன்னும் நிறைய வேலை இருக்கிறது. ஆர்டிமிஸ் ||| (ARTEMIS III ) விண்கலம் 2027ம் ஆண்டு வாக்கில் தான் சந்திரனுக்குச் செலுத்தப்பட இருக்கிறது. இன்னும் ஆர்டிமிஸ் IV மற்றும் ஆர்டிமிஸ் V (ARTIMIS IV & ARTIMIS V) செலுத்தப்பட வேண்டும்.
இந்த விண் கலங்களை எல்லாம் செலுத்த நிதியும் நிறைய வேண்டும். ஆகவே, சந்திரனில் ஒரு தளத்தை அமைக்க இன்னும் காலம் கனியவில்லை” என்று கூறுகிறார். ஆர்டிமிஸ் தான் மனிதர்கள் சந்திரனில் உயிர் வாழ முடியுமா, முடியாதா? என்பதை நிர்ணயிக்கும்.
பொறுத்தார் சந்திரனை ஆள்வார்!