

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, கார் சந்தையில் களமிறக்கிய மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb) கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. ஸ்கோடா சூப்பர்ப் என்பது டொயோட்டா கேம்ரி போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும் ஒரு பிரீமியம் செடான் கார் ஆகும்.
பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டீசல் என்ஜின்களை படிப்படியாகக் கைவிட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், டீசல் கார்கள் என்றும் சிறந்தது தான் என்று வலியுறுத்த நீண்ட மைலேஜ் தரும் டீசல் கார் எது என்பதற்கு ஓர் ஆய்வு நடத்தினர். அதில் போலந்து ராலி (பேரணி) ஓட்டுநரான மிகோ மார்க்சிக், (Miko Marczyk) நான்காவது தலைமுறை ஸ்கோடா சூப்பர் காரில் ஒரு டீசல் டேங்க் முழுவதும் டீசல் நிரப்பி 2,831 கிலோமீட்டர் தூரம் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார்.
சராசரியாக 100 கிலோமீட்டருக்கு 2.61 லிட்டர் டீசல் மட்டுமே. ஒப்பிடுகையில் தற்போது களத்தில் உள்ள மாடலின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த எரிபொருள் நுகர்வு 100 கிலோமீட்டருக்கு 4.8 லிட்டர் ஆகும்.
2025 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ராலியில் போலந்து ராலி சாம்பியன் மிகோ மார்க்சிக் தற்போது உள்ள ஸ்கோடா சூப்பர்ப் காரை, ஒரே ஒரு டேங்க் டீசல் (66 லிட்டர்) மூலம் ஐரோப்பா முழுவதும் 2,831 கிலோமீட்டர் பயணத்தை முடித்து, 'ஒரே ஒரு டேங்க் எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட அதிக தூரம் ஓடிய கார்' என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த சாதனை எரிபொருள் ஓட்டம் போலந்தின் லாட்ஸில் தொடங்கி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் வழியாகத் தொடர்ந்தது, பின்னர் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி வழியாக மீண்டும் போலந்திற்குத் திரும்பியது. இந்த பாதை பல நாடுகளைக் கடந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் திறந்த சாலைகளின் கலவையைப் பயன்படுத்தி சென்றது. வாகன ஆய்வு மற்றும் ஓட்டுநர் ஓய்வுக்கு மட்டுமே நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்டன. GPS கண்காணிப்பு மற்றும் எரிபொருள் பதிவுகள் முழு தூரத்தையும் பதிவு செய்தன.
போலந்து பேரணி ஓட்டுநர் மிகோ மார்க்சிக் சூப்பர்ப் காரை இயக்கினார். இதில் சிறப்பு மைலேஜ் தரும் குறைந்த உராய்வு எதிர்ப்பு டயர்கள் பொருத்தப்பட்டன. தயாரிப்பு நிறுவனம் பரிந்துரை செய்த அளவு காற்று அழுத்தம் பயன்படுத்தப்பட்டது மற்றும் அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையில் சற்று உயரம் குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு இருந்தது.
அந்த சிறிய மாற்றங்களைத் தவிர, ஸ்கோடா சூப்பர்ப் அதன் வழக்கமான பவர்டிரெய்ன் அமைப்பில் இருந்தது- 148hp மற்றும் 360Nm பீக் டார்க் கொண்ட 2.0-லிட்டர் TDI எஞ்சின் ,ஏழு-வேக DSG தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்தது.
சூப்பர்ப் காரின் 66 லிட்டர் டேங்க் விளிம்பு வரை டீசல் நிரப்பப்பட்டிருந்தது. மார்சிக் இந்த சாதனை முயற்சியின் போது சராசரியாக மணிக்கு 80 கிமீ வேகத்தை பராமரித்து, ஈகோ பயன்முறையை இயக்கி ஓட்டினார். தனது சாதனை முயற்சியில் மிக்கோ வழக்கமான டீசலையே பயன்படுத்தினார்; இதன் காரணமாக, சாதனை படைத்த சூப்பர்பின் இறுதி எரிபொருள் நுகர்வு 100 கிமீக்கு 2.61 லிட்டர் (38.31 கிமீ/லி) என அளவிடப்பட்டது. இது ஸ்கோடாவின் முதன்மை செடானுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ 4.8 லி/100 கிமீ (20.83 கிமீ/லி) WLTP மதிப்பீட்டை விட மிகவும் சிறந்தது.
முந்தைய நீண்ட தூர ஓட்டங்கள், சூப்பர்ப் கிரீன்லைன் பதிப்பில், ஒரு டேங்கில் தோராயமாக 1,780 கி.மீ. தூரம் பயணித்தன. 2,831 கி.மீ. தூரம் பயணித்த இந்த முயற்சியில், அதே டேங்க் அளவு பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் விற்கப்பட்ட சூப்பர்பின் புதிய 2.0 TDI பதிப்பு பயன்படுத்தப்பட்டது.
டீசல் என்ஜின்கள் நீண்ட காலமாக அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்பு, குறிப்பாக மாசுபாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. இருப்பினும், பெட்ரோல் என்ஜின்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் சிறந்த எரிபொருள் திறன் மறுக்க முடியாதது. இந்த சமீபத்திய கின்னஸ் உலக சாதனை இந்த உண்மையை வலுப்படுத்தியுள்ளது, டீசலின் மைலேஜ் நன்மையை உறுதிபடுத்தியுள்ளது. மின்சார கார்கள் எதிர்காலமாக இருக்கலாம், ஆனால் நீண்ட தூர பயணம் ,நெடுஞ்சாலை க்ரூஸர்கள் மற்றும் செயல்திறன் ஆர்வலர்களுக்கு - டீசல் கார் இன்னும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது இந்த சோதனை ஓட்டம்.. சாதனை படைத்த ஸ்கோடா சூப்பர்ப் கார் 2026 ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.