சர்வதேச விதவைகள் தினம் - துணை இழந்தவர்களுக்கு தோள் கொடுப்போம்!

ஜூன் 23: பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
International Widows Day
International Widows Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ம் நாளன்று, ‘பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்’ அல்லது ‘பன்னாட்டு விதவைகள் நாள்’ (International Widows Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு சாரா நிறுவனமான லூம்பா அறக்கட்டளை நிறுவனர் ராஜ் லூம்பாவின் தாயார் ஸ்ரீமதி புஷ்பாவதி லூம்பா என்பவர், 1954 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று விதவையானதைக் கருத்தில் கொண்டு, லூம்பா அறக்கட்டளை ஜூன் 23 ஆம் நாளை ‘பன்னாட்டு கைம்பெண்கள்’ என்று அறிவித்துக் கொண்டாடியது. அதன் பின்னர், அந்த அமைப்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் நாளன்று நடைபெற்ற கூட்டத்தில், பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளுக்கான தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் வழியாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த கைம்பெண்கள் (விதவைகள்) தங்களது வாழ்வாதாரம், அடிப்படைத் தேவைகள், கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில சமயங்களின் கட்டுப்பாடுகளின் வழியாக, விதவைகளின் பார்வை துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொல்லி அவர்களை விலக்கி வைப்பதில் தொடங்கி, பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தப்படும் நிலை இருக்கிறது. ஏழை நாடுகளில் விதவைகள் பெரும்பாலும் அதிக வன்முறைக்கு ஆளாகின்றனர்.

இந்த வகையான வன்முறை ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மிகவும் பொதுவானது. இந்த நாடுகளில் விதவைகள் அடிக்கடி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தவறான நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றையெல்லாம் தவிர்த்து, விதவைகளின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குதல், அவர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் விதவைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு வளங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்றவைகளுக்கு இந்நாள் தேவையாக இருக்கிறது.

பன்னாட்டுச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதவைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும், மற்ற மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதும் மிக முக்கியம். விதவைகளுக்கு நிலம் மற்றும் சொத்துக்களில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், கணவரின் மரணத்திற்கு துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது குற்றம் சாட்டப்படவோக் கூடாது.

இதையும் படியுங்கள்:
சின்ன சின்ன உடல் உபாதைகள்... எதிர்கொண்டு கையாள 20 வீட்டு வைத்திய குறிப்புகள்!
International Widows Day

மேலும், சமூகத்தில் விதவைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்குச் சமமான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். பன்னாட்டுச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளபடி, விதவைகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது போன்ற பல்வேறு கருத்துகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதனை அனைத்து நாடுகளும் சட்டங்களாகக் கொண்டு, விதவைகள் நல் வாழ்விற்கு உதவுவதுடன், அவர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
160 கோடி ‘பாஸ்வேர்டுகள்’ திருட்டு- மிகப்பெரிய அளவில் தரவு விதிமீறல்... பயனாளர்கள் உஷார்!
International Widows Day

உலகம் முழுவதும், 258 மில்லியன் விதவைகள் உள்ளனர். இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் பெண் மக்கள் தொகையில் 10 சதவீதம் எனும் அளவாகும். விதவைகளில் பத்தில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். ஒரு துணையை இழந்தவுடன், பெண்கள் வறுமை, வன்முறை, சுகாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்பின்மை, பாகுபாடு, களங்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். பல நாடுகளில், பெண்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமைகள் இல்லை, மேலும் ஒரு துணை இறந்த பிறகு அவர்களின் அனைத்து உடைமைகளும் பறிக்கப்படலாம் என்கிற நிலையும் இருக்கிறது.

இந்நிலையில், விதவைகளுக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி செய்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com