"அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம்" என்கிறார்கள் யோக முனிவர்கள். அண்டத்தில் எண்ணற்ற சக்திகள், சத்துக்கள் பரவி கிடக்கின்றன. யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் மூலமாக அண்டத்திலுள்ள அளவற்ற சக்திகளை நம் உடலுக்கு பெற்றுக்கொள்ள முடியும். வேறெந்த சாதனங்களாலும் அண்ட சக்திகளை பெற இயலாது.
யோகாசனம் உடலில் நல்ல தசைத் திரட்சியையும், பலத்தையும், உறுதியையும், உடலில் எதையும் செய்ய தூண்டும் நெகிழ்ச்சி தன்மையையும் ஏற்படுத்தி உடலை பெருக்காமல் அதை கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. யோகா வெளி அங்கங்களை மட்டும் அல்ல உள் அங்கங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதனால் ஒருவருடைய கவனிக்கும் திறன் மேம்படும். இரத்த ஓட்டம், நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், செரிமான மண்டலம் போன்றவற்றை யோகா ஆரோக்கியமாக வைத்திருக்கும். பெண்கள் வயது அதிகரிக்கும் போது யோகா அவசியம் செய்ய வேண்டும். இதனால் உடலின் நெகிழ்வுத்தன்மை பாதுகாக்கப்படும்.
யோகா உங்களுக்கு ஊக்கமளித்து, வயோதிக்கத்தை தாமதப்படுத்தும் ஒரு வழி. ஒரு குறிப்பிட்ட நிலையில் நின்று மூச்சை கட்டுப்படுத்தி செய்யும் யோகா, நெகிழ்தன்மையை உடலுக்கு ஏற்படுத்துகிறது. அது மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. யோகா மன அழுத்தத்தை குறைக்கிறது. மூளை செயல்பாட்டை அதிகரித்து, ஒட்டுமொத்த மனநிலையையும் நேர்மறையாக மாற்றுகிறது. மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே வயோதிகம் தாமதமாகிறது. யோகா மூலம் மூட்டு ஆரோக்கியம் மேம்படுகிறது. இது இளமை தோற்றத்தை கொடுக்கிறது.
யோகா செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உடலைக் கஷ்டத்திற்கு ஆளாக்காமல் அவற்றிற்குரிய விதிமுறைகளை நன்கு அறிந்து ஓர் ஆசான் உதவியுடன் ஆசனங்களை செய்ய முயலவேண்டும்.
யோகாசனம் செய்பவர்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய 10 கட்டளைகள் இதோ....
யோகாசனம் செய்பவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் காலைக் கடன்களை முடித்து விட வேண்டும்.
யோகாசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியாமல் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.
கஷ்டம் ஏற்படுத்தாத எளிய முறையிலேயே பயிற்சிகள் இருக்க வேண்டும். உடலுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் பயிற்சியில் வலுக்கட்டாயமாக ஈடுபடக்கூடாது. களைப்பு ஏற்படும் போது இடை இடையே சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
யோகாப் பயிற்சிகளை எப்போதும் வெறும் வயிற்றில் இருக்கும் போதே செய்ய வேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு செய்யக் கூடாது. சாப்பிட்ட பிறகு 4 மணி நேரத்திற்கு பிறகும், லேசான சாப்பாடு என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகா செய்த பிறகு சாப்பிடலாம்.
உடல் நலம் இல்லாதபோது யோகா பயிற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். மீண்டும் உடல் நலம் பெற்ற பிறகு யோகா தொடங்கும் போது முதலில் மூச்சுப்பயிற்சி மட்டுமே ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டும். பிறகு சிறுகச்சிறுக மற்ற பயிற்சிகளைத் தொடரலாம்.
யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் சமயத்தில் முதல் மூன்று நாட்களுக்கு பயிற்சியை கைவிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஆறு மாதங்கள் கர்ப்பத்திற்கு பிறகு பயிற்சியில் ஈடுபட கூடாது. வழக்கமாக யோகாப் பயிற்சிகளை மேற்கொள்ளாத பெண்கள் மூன்று மாதக் கர்ப்பத்திற்கு பிறகு பயிற்சிகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த சமயங்களில் பெண்கள் மூச்சுப் பயிற்சியையும், கண் பயிற்சியையும், ரிலாக்சேஷன் பயிற்சிகளையும் செய்யலாம். மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடரும் போது சாதாரண பயிற்சியிலிருந்தே தொடர வேண்டும்.
யோகசானப் பயிற்சி செய்கிற இடம் அமைதியாகவும் காற்றோட்டமும் சூரிய ஒளியும் தாராளமாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும்.
ஆசனங்கள் செய்ய பாய், ஜமுக்காளம், போர்வை போன்றவற்றை விரிப்புகளாகப் பயன்படுத்தலாம்.
யோகா பயிற்சிகளை கூடிய வரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திலேயே தினமும் தவறாது செய்வது நல்லது.
பயிற்சிக்கு அரைமணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ குளிக்கலாம்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.