
உலக முதியோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் மூத்த குடிமக்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் பொது சபை 1990ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. 1991ம் ஆண்டு முதல் இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதியோர் என்பது பொதுவாக, வயது முதிர்ந்தவர்களைக் குறிக்கிறது. இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கும். முதியோருக்கான நலத்திட்டங்கள், உதவித் தொகைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் உதவி எண் போன்ற சேவைகள் அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன. முதியோர் உதவித்தொகை திட்டம், முதியோர் இல்லங்கள், முதியோர் பகல் நேர மையங்கள் ஆகியவை இவர்களின் நலனுக்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் மூத்த குடிமக்களுக்காக 14567 என்ற உதவி எண் செயல்படுகிறது.
ஆதரவற்ற முதியவர்களின் பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை இதுபோன்ற இல்லங்கள் வழங்குகின்றன. மேலும், முதியோர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் சமூக செயல்பாடுகளையும் இவை வழங்குகின்றன. மனநல ஆலோசனை மற்றும் சட்ட ரீதியான உதவிகளும் கிடைக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 60 கோடி பேராகும். இவர்களில் பெரும்பான்மையோர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம் / மருத்துவ அறிவியல் சுகாதார பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு ஆகியவற்றால் முதியோர் வாழ்நாள் அளவு உயர்ந்து வருகிறது.
வயதாகும்போது நீடித்து நிலைக்கும் நோய்கள் உருவாகி முதியோர் செயலிழந்து போகவும் வாய்ப்பு உண்டு. அதனால் சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடும். இதனால் அவர்கள் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரை சார்ந்திருக்கும் நிலையும், சமூக வாழ்க்கையில் இருந்து விலகல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் ஆகியவை மேலும் அவர்களது நிலையை மோசமாக்குகிறது. வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் திகழ நீடித்த பராமரிப்பு அளிப்பது நமது கடமையாகும்.
முதுமையில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்காமல், சமூகப் பிரச்னையாக நோக்க வேண்டும். ஒரு நாள் நமக்கும் வயதாகும்போது இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும். முதியோரை விலை மதிக்க முடியாத வளமாக அவர்களை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
தேவையான சுகாதார பராமரிப்பையும் நல்ல மேம்பாட்டையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். முதியோர்களை சிறியவர்கள் தனியாக ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர்களுடன் பேரன், பேத்திகள், கதைகள் சொல்லி பேசவும், சிரிக்கவும் அவர்களின் மேலான ஆலோசனைகளை கேட்டு நடக்கவும் செய்தல் வேண்டும். இதனால் முதியவர்களிடம் ஒரு மகிழ்ச்சியும், அவர்களுக்கு ஒரு புதுத்தெம்பும் ஏற்படும்.
முதியோர்கள் உங்கள் ஆரோக்கியத் தேவையை புரிந்து கொண்டு முறையாக நோய் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்யவும். உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த சமநிலை உணவு உண்ணவும். அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும். மிதமான உடற்பயிற்சி முறையை பின்பற்றவும். போதுமான ஓய்வு எடுக்கவும். உடலை அதிகமாக வருத்தக் கூடாது.
சமூக கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடவும், குடும்பத்தோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாக இருக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றி நிறுத்தக் கூடாது. முதியோர்களின் நலன்களை அறிந்து குடும்பத்தினர் அவர்களிடம் மகிழ்ச்சியாக இருந்தால் முதியவர்கள் உடல் நலனும் ஆரோக்கியம் சீர் பெறும்.