எந்த எதிர்பார்ப்புமில்லாத உழைப்பிற்கு உதாரணமான கழுதைகள் போற்றப்படும் நாள்!

World Donkey Day
World Donkey Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 8 ஆம் நாளன்று ‘உலக கழுதை நாள்’ (World Donkey Day) கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக, கழுதைகள் மனிதர்களுக்கு உறுதியான உதவியாளர்களாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்கள், கழுதைகளை மட்டும் எப்போதும் சரியான முறையில் பராமரிப்பதில்லை.

‘உலகக் கழுதை நாள்’ என்பது பாலைவன விலங்குகள் மீது சிறப்பு அக்கறை கொண்ட அறிவியலாளர் ராஸிக் ஆர்க்கின் என்பவரது சிந்தனையாகும். 2018 ஆம் ஆண்டில் உலக கழுதை நாள் தொடங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் தாழ்மையான கழுதையின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளில் இவை மூட்டை சுமக்கும் விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலை செய்யும் கழுதைகள் பெரும்பாலும் வாழ்வாதார மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே வாழ்பவர்களுடன் தொடர்புடையவை. வளர்ந்த நாடுகளில் சிறிய எண்ணிக்கையிலான கழுதைகள் இனப்பெருக்கத்திற்காக அல்லது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

தமிழர்களின் வளர்ப்பு விலங்குகளில் கழுதை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்விலங்கு பொறைமலிக் கழுதை என சங்க இலக்கியங்களிலும், நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்களிலும், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேப் போன்று, மிளகு, உப்பு மூட்டைகளை கழுதைகளின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை, பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிட்டுள்ளது.

தமிழில் மூத்த தேவி (மூதேவி) என்றழைக்கப்படும் இந்த தெய்வத்தின் வாகனம் கழுதையாகும். கழுதைகள் குறுக்கே செல்வதும், கனைப்பதும் நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.

கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.

இதையும் படியுங்கள்:
மே - 8: உலக தலசீமியா தினம் - தலசீமியா ஏற்பட காரணங்களும், அறிகுறிகளும் - நீண்டகால சிக்கல்கள் என்ன?
World Donkey Day

முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளுக்கு தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த சுமைகளைத் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாகக் கட்டி, பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாகக் கழுதைகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளைச் சுமப்பதற்கு அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.

மனிதர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக கழுதைகள் வாழ்ந்து வந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சரக்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு முற்றிலும் குறைந்து போயின. தமிழகத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே வந்து விட்டதாகக் கால்நடை மருத்துவத்துறை அண்மையில் அறிவித்ததுடன், கழுதை இனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் புதிய திட்டத்தையும் அறிவித்து, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படுத்தியும் வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கழுதை வளர்ப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது மேலாண்மை மற்றும் நோய் பராமரிப்பு குறித்து செயல்திறன் பயிற்சி அளிக்கப்படுவதடன் இந்தப் பயனாளிகளுக்கு குடற்புழு மருந்து, தடுப்பூசிகள், தாது உப்புக் கலவை, கட்டும் கயிறுகள், குளம்பு வெட்டும் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.

நம்மோடு இணைந்து வாழ்ந்த கழுதையினால், தற்போது எந்தப் பயனுமில்லை என்று அதனை ஒதுக்கி வைத்திருக்கும் நாம், இன்றைய நாளிலாவது, எந்த எதிர்பார்ப்புமில்லாத உழைப்பிற்கு உதாரணமாகச் சொல்லப்படும் கழுதைகளைப் போற்றிடலாம்.

இதையும் படியுங்கள்:
மாமிச உண்ணித் தாவரங்கள் எவ்வாறு சுற்றுச்சூழலின் பன்முகத்தன்மைக்கு உதவுகின்றன!
World Donkey Day
logo
Kalki Online
kalkionline.com