

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஹென்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், டி காக் ஒரு ரன்னிலும், அடுத்து வந்த பிரவிஸ் 2 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறத்தொடங்கியது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும் நிதானாமாக விளையாடிய கேப்டன் ஏய்டன் மார்கரம் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். மார்கரமின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை கடந்தது. இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களை திணரடித்தனர். மேலும் இவர்கள் இருவரும் பார்ட்னர் ஷிப்பில் அதிரடியாக விளையாடி வெறும் 4.1 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மன் கில் 28 ரன்னிலும், சூர்யகுமார் 12 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.