எதுவும் நிரந்தரமில்லை!- உலகக்கோப்பை கால்பந்து நாயகர்களின் கண்ணீர் மல்க வைக்கும் வாழ்க்கை பாடங்கள்!

கால்பந்து வீரர்கள் - True Success Stories
கால்பந்து வீரர்கள் - True Success Stories
Updated on

கஷ்டங்களை தாண்டி உயர்ந்த கால்பந்து வீரர்கள் வாழ்க்கை கதைகள் இந்த கட்டுரையில் சொல்லப் படுகின்றன. பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் வறுமையால் ஜெர்சி, பூட்ஸ் எல்லாம் விற்ற நிலையிலிருந்து உலகக் கோப்பையில் ஜெர்மனியை வீழ்த்திய ஹீரோவாக உயர்ந்தார். மனித வாழ்வில் துன்பங்கள் நிரந்தரம் அல்ல, முயற்சி இருந்தால் விதி மாறும் என்ற செய்தியை இந்த கதைகள் வலியுறுத்துகின்றன.

மனித வாழ்வில் கஷ்டங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. அது ஒரு நாள் நிச்சயமாக மாறும் என்பதை நமக்கு உணர்த்துகிறது இந்த கால்பந்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்...

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர். ஒரே இரவில் சரித்திரம் படைத்தது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது பராகுவே.

இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் (Orlando Gill). 120 நிமிடங்கள் களத்தில் அரணாக நின்று, பின்னர் ஷூட் அவுட்டில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து, தன் தேசத்தின் ஹீரோவாக அவதரித்தார்.

2022-ல், உலகக் கோப்பைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கில்லின் மகன் லௌதாரோ டேனியல் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரி பில்லை கூட கட்டமுடியாத வறுமை காரணமாக அவர் மனைவி ஆஸ்பத்திரியின் வெளியே காரிலிலேயே இரவில் படுத்திருந்தார்.

தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் தனக்குச் சொந்தமான உடைகள், ஜெர்சி, பூட்ஸ் என அனைத்தையும் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் முதன் முதலில் பராகுவே அணிக்காக விளையாடிய 2019 தென்அமெரிக்க U20 சாம்பியன்ஷிப்பில் அணிந்திருந்த ஜெர்சியைக் கூட விற்க கொடுத்துவிட்டார்.

யோனே விஸ்ஸா (Yoane Wissa) என்பவர் பிரான்சில் பிறந்த ஒரு DR காங்கோ தொழில்முறை கால்பந்து வீரர். 2026 பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்றில் போர்ச்சுகல் அணிக்கு எதிராக DR காங்கோ அணிக்காக இவர் அடித்த கோல், உலகக் கோப்பை வரலாற்றில் அந்த நாடு அடித்த முதல் கோலாகும். 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவரது வாழ்க்கை நொடிப்பொழுதில் மாறியது.

அவருடைய குழந்தையை கடத்தும் முயற்சியில், ஆட்டோகிராப் வாங்குவதற்காக வந்ததாகப் பொய்யாகக் கூறிய ஒரு பெண், அவரது வீட்டை அணுகி, அவர் கதவைத் திறந்தபோது, அவரது முகத்தில் அரிக்கும் தன்மையுள்ள ஒரு திரவத்தை வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், அவருடைய கண்கள் கடுமையாக பாதித்தது .டாக்டர்கள் அவருக்கு மீண்டும் பார்வை கிடைப்பது அரிது என்றார்கள். ஆனால், ஆறு மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கால்பந்து விளையாட திரும்பி வந்து சாதித்து காட்டினார்.

எடின் டிஜெகோ (Edin Dzeko) ஒரு புகழ்பெற்ற போஸ்னிய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். 1986 மார்ச் 17-ல் பிறந்த இவர், தனது சிறந்த ஆட்டத்திற்காக "போஸ்னிய வைரம்" என்று அழைக்கப்படுகிறார்.

கால்பந்து வீரர்கள் - True Success Stories
கால்பந்து வீரர்கள் - True Success StoriesAI Image

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணியின் கேப்டனாக எடின் ஜெகோ, தங்களது 32-வது சுற்று மோதலில் அமெரிக்காவிற்கு எதிராகக் கடுமையான சவாலை எதிர்கொண்டபோதிலும், ஆடவர் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்று, ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.

இவரது குழந்தைப்பருவம் போஸ்னிய போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. போர் தாக்குதலில் அவருடைய வீடு முற்றிலும் சிதைந்தது. குண்டுவெடிப்பு அபாயங்களுக்கு இடையே பதுங்கு குழிகளில் மறைந்து வாழ்ந்து, கால்பந்து விளையாட்டின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் விளையாட வந்து சாதித்தவர்.

ரொமேலு லுகாகு (Romelu Lukaku) ஒரு பெல்ஜிய தொழில்முறை கால்பந்து வீரர். 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறி, பின்னர் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தபோது, ரொமேலு லுகாகு ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முக்கியமாக ஒரு மாற்று வீரராகக் களமிறங்கிய லுகாகு, 3 கோல்களை அடித்ததோடு, உலகக் கோப்பை வரலாற்றில் பெல்ஜியத்தின் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதையும் படியுங்கள்:
உலகை ஆளும் கால்பந்து: எளிய விதிகளும் பலரும் அறியாத சுவாரசிய வரலாறும்!
கால்பந்து வீரர்கள் - True Success Stories

ரொமெலுவின் தந்தையும் கால்பந்து வீரர் தான். அவர் தன்னுடைய பணி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருந்ததால் வீட்டில் வறுமை. சில சமயம் இரண்டு மூன்று வாரங்களுக்கு கூட வீட்டில் மின்சாரம் தடைபட்ட காலம் இருந்திருக்கிறது.

சில சமயம் ரொமெலுவின் அம்மா ரொட்டி கடன் வாங்கி பாலில் அதிகப்படியாக தண்ணீர் கலப்பதை பார்த்ததும் தான், தன்னுடைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை ரொமெலு உணர்ந்திருக்கிறார். அப்போது தன் 6 வயதில் தானும் ஒரு பிரபலமான கால்பந்து வீரராக சபதம் எடுத்து பின் நாளில் சாதித்தும் காட்டினார்.

சாடியோ மனே (Sadio Mané) செனகல் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வீரர். செனகல் அணிக்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி, நாட்டின் அதிகபட்ச கோல் அடித்தவர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் செனகல் அணியின் கேப்டனாக களம் கண்டவர்.

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை கால்பந்து: ரசிகர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய உண்மைகள்!
கால்பந்து வீரர்கள் - True Success Stories

செனகலில் உள்ள ஒரு சிறிய கிராமமான பம்பாலியில் (Bambali) மனே பிறந்தார். சிறுவயதிலேயே தன் தந்தையை முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் நோய் காரணமாக இழந்த மனே, கால்பந்து விளையாட்டின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் தனது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, செனகலின் தலைநகரான டாக்கருக்குச் சென்று கால்பந்து அகாடமியில் சேர்ந்தார்.

கால்பந்தில் பிரபலமான பிறகு தனது சொந்த கிராமத்தில் மருத்துவமனை மற்றும் பள்ளிகளை கட்டிக்கொடுத்தார்.

நமக்காக எழுதப்பட்டது நம்மை அடைய கொஞ்சம் நாளாகுமே தவிர, நம்மை தழுவாமல் நிச்சயம் அது போகாது... என்று சாதித்து காட்டிய இந்த கால்பந்து வீரர்களின் வாழ்வை சாதிக்க நினைப்பவர்கள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ளலாம்.

கடுமையான பின்னடைவுகளையும் தனிப்பட்ட காயங்களையும் கடந்து, உங்கள் இலட்சியங்களை அடைவதற்கும், வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் மீண்டும் எழுந்து நிற்பதற்கும் தேவையான மன வலிமையை இக்கட்டுரை வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com